PUBLISHED ON : ஆக 21, 2023
திரு என்பது ஆள் பெயரின் முன்னே சேர்வது ஒரு வகை. ஊர்ப் பெயரின் முன்னே சேர்வது இன்னொரு வகை. திரு என்ற முன்னொட்டு ஒரு பெயரைச் சிறப்பித்தும், பெருமைப்படுத்தியும் அமைவது. செழிப்பையும், வளத்தையும், மதிப்பையும் குறிக்கும் சொல். ஆள் பெயருக்கும் முன்னதாகவே, ஊர்ப் பெயருக்குத் திரு சேர்த்துச் சொல்வது வழக்கமாகி இருக்கலாம். ஓர் ஊரில் கோவில் அமைந்திருந்தாலும், அவ்வூர்ப் பெயரோடு திரு சேர்த்துக் குறிப்பிடுவது வழக்கம்.
திரு என்ற முன்னொட்டால் பல ஊர்ப் பெயர்களின் உண்மைப் பொருளை நாம் அறியாமல் இருக்கிறோம். அவ்வூர்ப் பெயரின் பொருள் தெரியாமல், வழிவழியாக வழங்கிக் கொண்டிருப்போம்.
எடுத்துக்காட்டாக, மூன்று ஊர்கள் அடுத்தடுத்து இருக்கின்றன என்று கொள்வோம். அதைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று பார்ப்போம். முதலில் உள்ளது, நடுவில் உள்ளது, கடைசியில் உள்ளது. இதை இன்னொரு வடிவில் சொல்வதென்றாலும் முடியும். முதல், நடு, கடைசி என்பதைத் தமிழ்ச் சங்கங்களோடு ஒப்பிடுங்கள். தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம். அவ்வாறே மூன்று ஊர்களையும் எவ்வாறு சொல்லலாம்? முதலில் இருப்பது தலையூர், நடுவில் இருப்பது இடையூர், கடைசியில் இருப்பது கடையூர்.
இப்போது இவ்வூர்ப் பெயர்களின் சிறப்பைக் குறிக்க, இம்மூன்று ஊர்ப் பெயர்களோடும், திரு என்பதை முன்னே ஒட்டலாம். அப்பெயர்கள் எவ்வாறு மாறுகின்றன என்று பாருங்கள்.
தலையூர் - திருத்தலையூர்
இடையூர் - திருவிடையூர்
கடையூர் - திருக்கடையூர்
எல்லாம் நாமறிந்த ஊர்ப் பெயர்களே. இரண்டு ஊர்களுக்கு இடையே மருதூர் என்ற பெயரில் ஓர் ஊர் இடையில் இருப்பதாகக் கொள்வோம். அதுதான் இடை மருதூர். அதனோடு திரு முன்னொட்டினால் திருவிடைமருதூர். ஆற்றிடைப்பட்ட நிலம் அரங்கம் எனப்படும். திரு முன்னொட்டினால் திருவரங்கம்.
செந்தூர், செங்கோடு, சிராப்பள்ளி, நெல்வேலி, நள்ளாறு, நாவலூர், கழுக்குன்றம் என்று இவ்வூர்ப் பெயர்களோடு திரு என்ற முன்னொட்டைச் சேர்ப்போம். இதனால் அழகான மதிப்பான ஊர்ப் பெயர்கள் கிடைக்கக் காணலாம்.
- மகுடேசுவரன்
