PUBLISHED ON : ஆக 19, 2019

குங்குமப்பூ
தாயகம் : கிரீஸ்
பயிர் செய்யப்பட்ட ஆண்டு: 6ஆம் நூற்றாண்டு.
இந்தியில் கேசர் என்று அழைக்கப்படும் குங்குமப்பூ, குரோக்கஸ் சாட்டிவஸ் (Crocus sativus) என்கிற பூவிலிருந்து எடுக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த மலரில் இருக்கும் சூல்முடிகள் மென்மையாகக் காயவைக்கப்பட்டு, குங்குமப்பூவாக பக்குவப்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் குங்குமப்பூவைப் பற்றிய மருத்துவக் குறிப்புகள் இருக்கின்றன. அதிக விலை மதிப்புள்ள இந்த நறுமணப் பொருள், 6ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் காஷ்மீர் பகுதியில்தான் முதன்முதலில் அறிமுகமானது. ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்க வாய்ப்புள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதை மிகவும் பிரபலமாக்கியவர் மொகலாய மன்னர் ஜஹாங்கிர். இவருடைய ஆட்சிக்காலத்தில், குங்குமப்பூ, பெருமளவில் பயிரிடப்பட்டது. மொகலாய அரசர்களுக்கு நறுமணப் பொருட்களைச் சேர்த்து சமைப்பது பிடித்தமானது. அவர்களுடைய அன்றாட உணவு வகைகளில் குங்குமப்பூ சேர்க்காமல் எந்த வகை உணவும் சமைத்தது கிடையாது என, மொகலாய உணவு வகைகள் பற்றிய நூல்கள் சொல்கின்றன.
குங்குமப்பூ விளைவதற்கு, மிக உலர்வான வண்டல் மண் ஏற்றது. உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர், பரஸ்பூர் ஆகிய நகரங்கள் குங்குமப்பூ விளைவிப்பதற்கு ஏற்ற இடங்களாக இருக்கின்றன. ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை மூன்று முதல் நான்கு மாதங்களில் குங்குமப்பூ அறுவடை செய்யப்படுகிறது. குங்குமப்பூவை சூரியன் உதயமாவதற்கு முன்பு, அதிகாலையிலேயே அறுவடை செய்துவிட வேண்டும்.
நாசியைத் துளைக்கும் நறுமணத்துடன் பளீர் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் குங்குமப்பூ, இந்திய உணவு வகைகளில், நறுமணப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. இது உணவிற்கு அசத்தலான நிறத்தையும் கூடுதல் சுவையையும் தருகிறது. நமது உணவில், புலாவ், குல்பி,
கேசரி-பாத் ஆகிய உணவுகளில் குங்குமப்பூ சேர்க்கப் படுகிறது.

