PUBLISHED ON : ஆக 19, 2019

இந்தியா முழுவதும், பிஸ்கெட்டுகள் பிரபலம். பலருக்கு காலை தேநீரோடு பிஸ்கெட் இருந்தால், காலை வேளை சிறப்பாகத் தொடங்கும். சிலருக்கு பிஸ்கெட் என்பது ஊட்டச்சத்துப் பொருள் என நம்புகிறார்கள். இப்படி இந்தியா முழுவதும் பிஸ்கெட் பற்றிய பல கருத்துகள் நிலவுகின்றன. கி.பி. 1660-ஆ-ம் ஆண்டில் பிரெஞ்சு இயற்பியலாளரும், பயண ஆர்வலருமான, 'பிரான்கோயிஸ் பெர்னியர்' (François Bernier) என்பவர், பிஸ்கெட் பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறார். சோம்பு சேர்த்துத் தயாரிக்கப்பட்ட இனிப்பு பிஸ்கெட்டுகள் அப்போது புழக்கத்தில் இருந்தன என்ற தகவல், அந்தக் குறிப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. 1847ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பிரிட்டனில் இருந்து பிஸ்கெட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டன. 1885-ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக பிஸ்கெட் உற்பத்தி தொடங்கியது. இரண்டாம் உலகப்போருக்கு முன்புவரை, இந்தியாவில் ஆண்டுதோறும் 2,200 டன் பிஸ்கெட் உற்பத்தி ஆனது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, விதவிதமான வகைகளில் சுமார் பத்தாயிரம் டன் பிஸ்கெட்டுகள் உற்பத்தியாயின என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

