
நியாய உணர்வு
ஓவியா, கடந்த இரண்டு நாட்களாக எங்கள் வகுப்பு ஆசிரியரோடு பேசிக்கொண்டே இருந்தாள். சமீபத்தில் நடந்த வகுப்பறை தேர்வில், அவளுடைய ஆங்கிலத் தாளில், கூடுதல் மதிப்பெண் போடவேண்டும் என்பதுதான் அவளது கோரிக்கை. எங்கள் வகுப்பு ஆசிரியர், தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார். ஓவியாவும் விடுவதாக இல்லை. அதைப் பார்க்க, பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருநாள், ஓவியாவைக் கூப்பிட்டு, அவளது விடைத்தாளை வாங்கிப் பார்த்தேன். கூடுதல் மதிப்பெண் கொடுக்கலாம் என்பது போல் இருந்தது.
இன்னொரு தோழி பெயரைச் சொல்லி, 'அவளுக்கு கூடுதல் மதிப்பெண்ணை ஆசிரியர் வழங்கியிருக்கிறார், எனக்கும் வழங்கினால் என்ன' என்று கேட்டாள் ஓவியா. நியாயமாகத்தான் தோன்றியது. இதைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தபோது, உமா மிஸ் வந்தார்.
“நீ செய்யறது ரொம்ப கரெக்ட், செய்.” என்றபோது, எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. வகுப்பாசிரியரோ, ஒருவிதமான பிடிவாதத்தோடு, மதிப்பெண் போட மறுக்கிறார். ஓவியாவின் முயற்சிகளுக்கு என்ன பலன் கிடைத்துவிடும்?
“நியாய உணர்வுன்னு ஒண்ணு இருக்கு கதிர். அது எல்லோருடைய மனசுலேயும் இருக்கு. அதைத் தட்டி எழுப்பணும். இயல்பாகவே நியாயத்தோட நடந்துக்கறவங்க உண்டு. ஆனால், நியாயம்னு தெரிஞ்சே அதை சில பேர் ஒத்துக்க மாட்டாங்க. அவங்க தாங்க பிடிச்ச முயலுக்கு மூணே கால்னு நிப்பாங்க. அவங்க மனசை மாத்தணும். நியாயத்தை நயமா, பதமா எடுத்துச் சொல்லணும். உணர்த்தணும். மகாத்மா காந்தி, வினோபா பாவே எல்லாம் இதைத்தான் செஞ்சாங்க, வெற்றியும் அடைஞ்சாங்க.”
“பூதான இயக்கம் நடத்தினாரே, அவர்தானே மிஸ் வினோபா பாவே?”
“கரெக்ட். காந்தியோட சீடர் அவர். அவர மாதிரி சாதனை செஞ்சவர் யாருமில்ல, தெரியுமா?”
“பூதான இயக்கத்தைச் சாதனைன்னு சொல்றீங்களா மிஸ்?”
“பின்னே? இந்தியாவுல பெரும்பாலானவங்க ஏழை எளியவர்கள். அவங்களுக்குச் சொந்தமாக ஒரு சின்ன துண்டு நிலம்கூட இல்லை. பெரிய முதலாளிகள்கிட்ட கூலி வேலை பார்த்து, வயித்தைக் கழுவிக்கிட்டு இருந்தாங்க. பல தலைமுறைகளாக இப்படிப்பட்ட நிலை நீடிச்சுக்கிட்டு வந்துது. இதுக்கு என்ன தீர்வுன்னு தெரியலை.
இதனால், ஏற்றத்தாழ்வு அதிகமாகி, சமூகத்துல பிரச்னைகள் உருவாக ஆரம்பிச்சுது. இதுபோன்ற சூழ்நிலை, ஆந்திரப் பிரதேசத்துல ஏற்பட்டுச்சு. அப்போ தான் அங்கே நடைப் பயணம் போனார் வினோபா பாவே. ஏழை எளியவர்களைச் சந்திச்சார். பணக்கார நில முதலாளிகளையும் சந்திச்சார். ஏழைகள் தங்கள் நிலைமையைச் சொன்னாங்க. எங்களுக்கு ஒரு துண்டு நிலம்கூட சொந்தமாக இல்லை, எப்படி வாழறதுன்னு கேட்டாங்க.
வினோபா பாவேவுக்குப் பதில் தெரியலை. கூடியிருக்கிற நில முதலாளிகள்கிட்ட கேட்டார். நீங்க யாராவது உதவி பண்ண முடியுமான்னு அவர் கேட்ட கேள்வி, ரொம்பவும் அடிப்படையானது. அங்கே இருந்த ஒருத்தர், துணிஞ்சு எழுந்து நின்றார். தன்னோட நிலத்துலேருந்து 100 ஏக்கர் நிலத்தை நிலமற்ற ஏழை எளியவர்களுக்குத் தரேன்னு ஒப்புக்கிட்டார்.
அங்கேதான் அவரோட 'பூதான இயக்கம்' தொடங்கிச்சு. அது வெறுமனே நிலத்தைத் தானமாக வாங்கி, ஏழை எளியவர்களுக்குக் கொடுக்கக்கூடிய இயக்கம்னு நினைக்கவேண்டாம்.
அடிப்படையில், எல்லோர் மனசுலேயும் இருக்கும் நியாய உணர்வைத் தட்டி எழுப்பிய இயக்கம். ஒவ்வொரு பெரிய நிலமுதலாளி மனசுலேயும் கேள்வியை விதைச்சார் வினோபா. 'உனக்குத் தேவையான நிலத்தை விட, அதிகமாக நீ வெச்சிருக்கே. அதை மத்தவங்களுக்குக் கொடுக்கக் கூடாதா? உண்மையிலேயே இந்த அத்தனை நிலத்துக்கும் நீதான் சொந்தக்காரனா? கொஞ்சம் நியாய தர்மத்தோட யோசி'ன்னு அவர் குரல் ஒலிச்சுது.
இதனோட விளைவு என்ன தெரியுமா? 1951இல் தொடங்கின 'பூதான இயக்கத்துல' 1957க்குள்ள சுமார் 2,95,054 ஏக்கர் நிலம் சேர்ந்துபோச்சு. சுமார் 5,000 கிராமங்கள்ல நிலம் தானமாக கிடைச்சுது. ஒவ்வொரு ஊர்லேயும் அங்கேயுள்ள நிலமற்ற ஏழை எளியவர்களுக்கு அதைப் பிரிச்சுக்கொடுத்து விவசாயம் செய்யச் சொன்னார் வினோபா பாவே.
மனிதர்கள் அடிப்படையிலேயே ரொம்ப நல்லவங்க. அவங்களுக்குப் புரியவைக்கணும். எது நியாயம், எது அநியாயம்னு எடுத்துச் சொல்லணும். அது போதும். அதையும் அவங்க மனசு நோகாமச் செய்யணும். அப்படி செஞ்சுக்கிட்டே இருந்தா, ஒருநாள் உண்மை ஜெயிக்கும், நியாயம் நிலைநாட்டப்படும்.
இதைத்தான், காந்தியும் செஞ்சார். 'இந்தியாங்கறது எங்களோட தேசம். பிரிட்டிஷ் நாட்டுக்காரனான நீ, இங்கே வியாபாரம் செய்ய வந்தவன். உனக்கு நான் ஏன் அடிமையாக இருக்கணும்? நீ எப்படி எங்களை ஆளலாம்? நீ வெளியே போகவேண்டியவன்' என்பதை தன்னோட ஒவ்வொரு போராட்டம் மூலமாகவும், பிரிட்டிஷ்காரர்களுக்குப் புரியவெச்சார். அமைதியான, அகிம்சை முறையில் உணர்த்தினார். பிரிட்டிஷ்காரன் வெக்கப்பட்டான். நாம நமக்குச் சொந்தமில்லாத அந்நிய தேசத்துல உட்கார்ந்துகொண்டிருக்கிறோம்னு உணர்ந்து, வெளியேறினான்.
இதுதான் நியாய உணர்வுக்குக் கிடைத்த வெற்றி. இந்த முயற்சியை ரொம்ப காலம் செய்யவேண்டியிருக்கலாம். ஆனால், வெற்றி கிடைச்சே தீரும்.”
நான் ஓவியாவைப் பார்த்தேன். அவள் முகத்தில் தெரிந்த திருப்தி, என்னையும் உத்வேகம் கொள்ள வைத்தது.

