PUBLISHED ON : ஆக 19, 2019

குரங்குகளால் விஷயங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி நினைவு வைத்துக் கொள்ள இயலுமா? என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகப்பட்டனர். பரிசு அல்லது உணவு போன்றவற்றை எதிர்பார்த்து நினைவுபடுத்திக் கொள்கின்றனவா என்ற கருத்திலும் விலங்கியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
ஏனெனில், குரங்குகள், எலிகள், புறாக்கள், காக்கைகள் போன்ற உயிரினங்கள் ஓர் அட்டவணையில் உள்ளவற்றை வரிசைப்படி நினைவுகொள்ளக் கூடியவை என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆயினும், ஓர் உந்துதல் அல்லது பரிசு இல்லாமல் தமது அறிவைப் பயன்படுத்திச் செய்கின்றனவா என்பதில் சர்ச்சையும் குழப்பமும் இருந்தது.
கிரேக் ஜென்சன் (Greg Jensen) என்ற கொலம்பியா பல்கலைக்கழக உளவியலாளர், அவரது உதவியாளர்களுடன் ஆய்வுகள் செய்தார். இதன்படி, ரீசஸ் குரங்குகள் மனிதர்களைப் போல தர்க்கரீதியாகச் சிந்திக்கின்றன என்று கூறுகிறார். அதாவது a என்பது b க்கு முன்பு என்றால், c என்பதும் a க்கு பின்புதான் என்று உணர்ந்து அறிகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்.
ஏனெனில், ஆய்வில் பரிசுகள் அவற்றிற்கு ஒரே முறையில் சரியான விடைக்கு மட்டும் வழங்கப்படவில்லை. தவறான பதில்களுக்கும் வழங்கப்பட்டன! எனவே, பரிசுகளை எதிர்பார்த்துத்தான் விடைகள் வந்தன என்ற கருத்து அடிபட்டுப் போனது. பரிசுகள் இல்லாதபோதும், விடைகள் பெரும்பாலும் சரியாகவே இருந்தன.
அட்டவணையில் சில பொருட்கள் கொடுக்கப்பட்டு, அவற்றின் வரிசையை முறைப்படுத்தக் குரங்குகளுக்குக் கூறப்பட்டது. அவை காற்றடைத்த பலூன், சோளக்கதிர் மற்றும் வரிக்குதிரை போன்ற உருவங்கள். 600 முறை சோதனை செய்தபின் இந்த முடிவுகள் கண்டறியப்பட்டன.
அவருடைய கணிப்பு, இது போன்ற தர்க்கரீதியான சிந்தனை, குரங்குகளின் சமூக வரிசையில் முறையாகச் செயற்பட உதவும்.
அதாவது, சமுதாய ஒழுங்கில் (தலைவன், தளபதி, தொண்டன் என்கிற முறை) தனது மற்றும் மற்ற குரங்குகளின் நிலையைக் கண்டறியப் பெரிதும் உதவும். பெரும்பாலும் இந்த அறிவு பரிணாம வளர்ச்சியே என்றும், அதனால் இனம் மற்றும் குழுக்களின் உறவுகளை அறியப் பயன்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
- சு.சந்திரசேகர்

