PUBLISHED ON : ஆக 06, 2018

எம்.எஸ். சுவாமிநாதன்
7.8.1925
கும்பகோணம், தமிழ்நாடு.
சுதந்திர இந்தியாவைத் தாக்கிய பஞ்சம், ஒட்டுமொத்த நாட்டையும் அழிக்கக் காத்திருந்தது. அதிலிருந்து மீளவும் பசியைப் போக்கவும் வந்ததுதான் 'பசுமைப் புரட்சி'! இந்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் 'பசுமைப் புரட்சியின் தந்தை' என அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன். இன்றைய இந்தியா, உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பதுடன், ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்குக் காரணமும் இவரே!
கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்து, திருவனந்தபுரம் கல்லூரியில் விலங்கியல் பட்டம் பெற்றார். மருத்துவக் குடும்பம் என்பதால், இவரும் மருத்துவராக வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. ஆனால், 1942இல் பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட வங்காளப் பஞ்சம் இவரை மிகவும் பாதித்தது. அதனால், வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து, கோவை வேளாண் கல்லூரியிலும், டில்லியில் மரபணு பயிர்கள் குறித்தும் படித்தார். கேம்பிரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக் கிடைத்தது. அதைத் தவிர்த்துவிட்டு, இந்தியா வந்தார்.
1960களில் இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டபோது, புதிய ரக கோதுமையை அறிமுகம் செய்தார். இது, 'கோதுமைப் புரட்சி' என்று அப்போதைய பிரதமர் இந்திராவால் பாராட்டப்பெற்றது. புதிய நெல் வகைகளுடன் வேளாண் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தினார். சர்வதேச அளவில் 40க்கும் மேற்பட்ட விருதுகளும் கௌரவ டாக்டர் பட்டங்களும் பெற்றுள்ளார். 2017இல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் சார்பில், 'ஏர் அறிஞர்' விருதை, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார்.
'பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு' என்று சொன்ன இவர், வேளாண் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி, செயற்பட்டு வருகிறார்.
