PUBLISHED ON : மே 22, 2017
ராஜா ராம்மோகன் ராய்
22.5.1772 - 27.9.1833
ஹூக்ளி, வங்காளம்
தன்னுடைய 15 வயதிலேயே ஆங்கிலம், பிரஞ்சு, லத்தீன், ஹீப்ரு, கிரேக்கம், சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் போன்றவற்றையும் ஆழ்ந்து பயின்றார்.
ஆங்கில நாகரிகத்தின் மீது அதிக ஆசை இருந்ததால், பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். இந்தியாவில் இருந்த சமூக ஏற்றத் தாழ்வுகளையும், முறைகேடுகளையும் கண்டு, அவற்றைக் களைய சமுதாயப் பணியில் ஈடுபட்டார்.
பெண்ணுரிமைக்காக, 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடினார். மூடப் பழக்கங்கள், சடங்குகளை ஒழித்து, சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தினார். அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்.
சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டுவர, கொல்கத்தாவில் 1815ல் ஆத்மிக சபையை உருவாக்கினார். இதன்மூலம், அனைத்து மக்களையும் சாதி, மத பாகுபாடின்றி இணைய வைத்தார்.
பெண் உரிமை, பெண் கல்வி, விதவை மறுமணம், பெண் சொத்துரிமைக்காக பாடுபட்டார். உடன்கட்டை ஏறுதல், பலதார மணம் போன்றவற்றுக்கு எதிராக தீவிரமாகப் போராடினார்.
வேதாந்த சாஸ்திரங்களின் சாரத்தை, 1819ல் ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் எழுதி வெளியிட்டார். உபநிடதங்களை மொழிபெயர்த்தார். பெண்களுக்கான கட்டாயக் கல்வி முறைக்குப் பெரிதும் ஆதரவு காட்டி, ஆங்கில வழிப் பள்ளியை நிறுவினார். மேற்கத்திய, - இந்திய கற்றல் முறை இணைந்த பாடத்திட்டம் கொண்ட வேதாந்த கல்லூரியையும் தொடங்கினார்.
இந்தியாவின் முதல் சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை 1828ல் நிறுவினார். அதன் மூலம், பலதார மணம், சாதி அமைப்பு, குழந்தை திருமணம், சிசுக்கொலை, தீண்டாமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்.
உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கத்துக்கு எதிராக, நீண்ட காலம் போராடினார். 1833ல், அப்போது ஆட்சியிலிருந்த வில்லியம் பென்டிங் ஒரு சட்டம் இயற்றி, சதி முறையை ஒழித்தார். இதன் மூலம் மோகன் ராயின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது.
இவர் நினைவாக ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளையை, இந்திய கலாசாரத்துறை நிறுவி, மாநில நூலகங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

