PUBLISHED ON : மே 21, 2018

கார்ல் லின்னேயஸ்
23.5.1707 -- 10.1.1778
ஸ்வீடன்
உயிரினங்களைப் பொதுப்பெயரிட்டு அழைக்கும் நடைமுறையில் இருந்த குழப்பங்களைத் தீர்த்து ஒழுங்குபடுத்தியவர் கார்ல் லின்னேயஸ். மனிதனுக்கு 'ஹோமோ செப்பியன்ஸ்', அரிசிக்கு 'ஒரைசா சட்டைவா', உருளைக்கிழங்குக்கு 'சொலானம் ட்யூபரோசம்' என்று புதிய முறையில் பெயர்கள் வைத்தார். அவரது இருசொற் பெயரிடும் முறை உலக அளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.
லின்னேயஸின் தந்தை தாவரவியலாளராக இருந்ததால், தாவரவியல் மற்றும் பிற பாடங்களை அவரிடமே கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. பள்ளியில் இவரது ஆர்வத்தைக் கண்ட ஆசிரியர், மருத்துவம் படிக்க ஆலோசனை கூறியதால், உடலியல் மற்றும் தாவரவியல் பயின்றார்.
படிப்பை முடித்த பிறகு, பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் வேலை கிடைத்தது. அந்தத் துறைசார்ந்த இவரது விரிவுரைகள் மிகவும் பிரபலமடைந்தன. தாவரங்களின் வகைப்பாட்டை மேம்படுத்துவது குறித்த கட்டுரைகளை எழுதினார். இதனால், தாவரவியல் ஆராய்ச்சியில் ஈடுபட நிதியுதவி கிடைத்தது. நீண்டபயணம் மேற்கொண்டு, தாவரங்கள், பறவைகள், புவியியல் குறித்து ஆராய்ந்தார். இந்தப் பயணத்தின் முடிவில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுவகை தாவரங்களை அவர் கண்டறிந்தார். அதனடிப்படையில், 'ஃப்ளோரோ லேப்போனிகா' (Flora Lapponica) என்ற நூலை எழுதினார். 1737இல் வெளிவந்த 'சிஸ்டம் ஆஃப் நேச்சர்' நூல், தாவரவியல் உலகில் முக்கியமானதாக அமைந்தது.
பல்வேறு ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து, தாவரங்களை வகைப்படுத்தும் முறையில் அதிக கவனம் செலுத்தினார். ஆராய்ச்சியின் முடிவில், பல சொற்பெயரிடும் முறையை மாற்றி இருசொல் பெயரிடும் முறையை உருவாக்கினார். அதுதான் 1753இல் எழுதப்பட்ட 'ஸ்பீசீஸ் பிளான்டரம்' (Species Plantarum) நூல். அந்த நூலில், தாவரங்களுடன் விலங்கு, பறவை, மீன், உள்ளிட்ட 13 ஆயிரம் உயிரினங்களையும் வகைப்படுத்திப் பெயர் சூட்டினார். இவரைக் கௌரவிக்கும் விதமாக, ஸ்வீடன் மன்னர் 1761இல், சர் பட்டம் வழங்கினார்.
