PUBLISHED ON : ஏப் 04, 2016
1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89... என்று நீளும் தொடர் வரிசை எண்களையே கணிதத்தில் 'ஃபிபனாக்ஸி எண்கள்' என்கிறோம்.
இது எந்த அடிப்படையில் வருகிறது என்றால், வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் 1, 2 ஆகிய இரு எண்களைக் கூட்டினால் மூன்றாவது இடத்தில் இருக்கும் எண் 3 கிடைக்கும். இப்பொழுது நான்காவது இடத்தில் இருக்கும் எண்ணைக் கண்டறிவதற்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் எண்களைக் கூட்ட வேண்டும். (2+3=5). அதேபோல், ஐந்தாம் இட எண்ணைப் பெற மூன்று மற்றும் நான்காம் எண்களைக் கூட்ட வேண்டும். (3+5=8). இப்படியாக, இறுதி இரு எண்களைக் கூட்டி அடுத்த எண்ணை பெற வேண்டும்.
இந்த எண்கள் பற்றிய குறிப்புகளை இந்தியக் கணித மேதையான 'பிங்களா' முதன் முதலாக வழங்கியுள்ளார். அவரது படைப்பு மூலம் மேற்கண்ட எண்களை பெறலாம் என அறிகிறோம்.
இத்தாலியின் 'லியோனார்டோ ஃபிபனாக்ஸி' என்கிற கணித அறிஞர் 1202ஆம் ஆண்டில் 'லிபர் அபேச்சி' என்ற புத்தகத்தில், ஒரு புதிர் மூலமாக இந்த எண்களை வழங்கி இருந்தார். எனவே, அவரை நினைவுகூரும் வகையில் 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89... என்று நீளும் தொடர் வரிசை எண்களுக்கு 'ஃபிபனாக்ஸி எண்கள்' என பிற்காலக் கணித அறிஞர்கள் பெயர் வைத்தார்கள்.
பேராசிரியர். 'பை' சிவராமன்,
தூ. கோ. வைணவ கல்லூரி, சென்னை.
