PUBLISHED ON : மார் 26, 2018

குரங்கணி தீ விபத்து, மரணங்கள் பற்றிய செய்திகளைப் படித்துக்கொண்டிருந்தார் உமா மிஸ். ஓவியா அந்தப் படங்களையெல்லாம் பார்த்து 'உச்' கொட்டிக்கொண்டு இருந்தாள்.
“டிரெக்கிங் போனவங்களுக்கு காட்டுத் தீ பத்தி எதுவுமே தெரியலை போல இருக்கு மிஸ்.” சோகத்தோடு ஆரம்பித்தாள் ஓவியா.
“தெரியலங்கறதைவிட, அப்படி ஒண்ணு ஏற்பட்டா எப்படித் தப்பிக்கணும்ங்கற பயிற்சி அவங்களுக்கு இல்லாம போச்சேன்னுதான் கவலையா இருக்கு.” என்றார் உமா மிஸ்.
“இதையெல்லாம் கத்துக்க முடியுமா மிஸ்? ஆர்வத்துல டிரெக்கிங் போறாங்க.” என்றேன் நான். “அதனாலதான் வாழ்க்கைக் கல்வி அல்லது இயற்கைக் கல்வி அவசியம்னு சொல்றோம்.” என்ற உமா மிஸ்,
“மாணவர்களைக் காட்டுக்குக் கூட்டிக்கிட்டுப்போய், அதனோடு புதுமைகளைப் பத்தி சொல்லிகொடுக்கிறாங்கன்னு ஏற்கெனவே சொன்னேன். அதோட சேர்ந்து, அங்கே என்னவிதமான பாதிப்புகள் வரலாம், வந்தால் எப்படி பாதுகாத்துக்கொள்ளணும் என்றும் பயிற்சி கொடுக்கப்படும். அதேபோல் தண்ணியில போகும்போது எப்படி இருக்கணும் என்றும் தெரிஞ்சுக்கணும்…”
“தண்ணின்னா எப்படி மிஸ்?”
“வங்கதேசத்துல, மழைக்காலத்துல, ஒரே வெள்ளக்காடா இருக்கும். அந்த நாட்டுல மூணுல ஒரு பகுதி முழுக்க தண்ணியா இருக்கும். வெளியே போக முடியாது. வரமுடியாது. ஆனால், அதுக்காக மாணவர்களோட படிப்பு நின்னுட முடியாதே. இதை மனசுல வெச்சுக்கிட்டு, 'மிதக்கும் பள்ளிகள்' உருவாக்கியிருக்காங்க தெரியுமா?”
“மிதக்கும் பள்ளின்னா?”
“மாணவர்களால பள்ளிக்குப் போகமுடியாது; அப்போ பள்ளிகள் மாணவர்கள் கிட்ட வரும். அதாவது, கப்பல்கள் மேல சின்னச்சின்ன கிளாஸ்கள் கட்டியிருக்காங்க. அதை காலையில் தண்ணியில ஓட்டிக்கிட்டு வந்து, குழந்தைகளை எல்லாம் ஏத்திக்கிட்டு, ஓரிடத்துல நிறுத்திடுவாங்க. முப்பது பசங்கவரைக்கும் படிக்கறமாதிரியான கிளாஸ் அது. அங்கேயே கம்ப்யூட்டர், புத்தகங்கள், ஆசிரியர்கள் எல்லோரும் இருப்பாங்க. சாயங்காலம் வரைக்கும் வகுப்பு. மறுபடியும் மாலையில், கப்பலிலேயே கரைக்குக் கொண்டு போய்விட்டுடுவாங்க…”
“சூப்பரா இருக்குமே மிஸ்.”
“ஆமாம். இங்கே முக்கியம் என்ன தெரியுமா? படிப்பு மட்டுமல்ல; இயற்கைக் கல்வி. அந்த மாணவர்கள், தண்ணியோட, வெள்ளத்தோட, மரம் செடி கொடிகளோட வாழவேண்டியவங்க. அதோடு இணக்கமா எப்படி வாழணும், அதையெல்லாம் ஒரு பிரச்னையா பார்க்காமல், இயல்பா வாழக்கத்துக்கணும்னு சொல்லிக்கொடுக்கப்படுது.”
“பிரமாதம் மிஸ். அப்போ அவங்களுக்கு நீச்சல் தெரியும், தங்களை விபத்துகள்ளேருந்து காப்பாத்திக்கத் தெரியும்…”
“நிச்சயமா. இதுக்கு முன்னாடியே நைஜீரியாவுல இப்படி ஒரு ஸ்கூல் இருந்தது. இப்போது கம்போடியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜாம்பியா ஆகிய வெள்ளப் பாதிப்பு உள்ள நாடுகள்ல இத்தகைய கல்விமுறையை அறிமுகப்படுத்திக்கிட்டு வராங்க..”
“வேற வித்தியாசமான ஸ்கூல்கள் இருக்கா மிஸ்?”
“நிறைய இருக்கு. டென்மார்க் பத்தி முன்னாடியே பேசியிருக்கோம். அங்கே கோபன்ஹீகன் என்ற நகரத்துல, ஜிம்னாஸியம் மாதிரியே பெரிய ஸ்கூல் கட்டியிருக்காங்க. தனித்தனியா வகுப்பறைகள் கிடையாது. ஓபன் லேர்னிங். யார் வேணுமானாலும் யாரோடவேணுமானாலும் இணைஞ்சு படிக்கலாம். கூடவே டீச்சர் வெச்சுக்கிட்டுப் படிக்கலாம். மொத்தக் கட்டடமும் வைஃபை செய்யப்பட்டிருக்கு. எல்லா பாடத்தையும் எங்கேயிருந்து வேணும்னாலும் டவுன்லோட் செஞ்சுக்கிட்டுப் படிக்கலாம்.”
“இதனால என்ன செளகரியம் மிஸ்?”
“இதைத்தான் படிக்கணும்; இப்படித்தான் படிக்கணும்ங்கற கட்டுப்பாடு கிடையாது. வகுப்பறை இல்லைங்கறதே பெரிய சந்தோஷம் தானே. அதுவும் ஜிம்னாஸியம்போல இருக்கும்ன்னுபோது, முற்றிலும் வேறவிதமான உணர்வைக் கொடுக்கும். நம்முடைய இடங்கள் பல சமயங்கள்ல ரொம்ப நெருக்கடி கொடுக்கும். அந்த நெருக்கடியைப் போக்கறதுக்குத்தான் இந்த மாதிரி பெரிய வகுப்பறைகள்… இதுலேருந்து முற்றிலும் வேற வகையான ஸ்கூல் ஒண்ணு ஸ்வீடன்ல இருக்கு.”
“அது என்ன மிஸ்?”
“ஈகாலியான்னு அந்த ஸ்கூலுக்குப் பேரு. அங்கே ஆண், பெண் பாலின வித்தியாசம் கிடையாது, மதம், வயசு, வகுப்பு என்ற வித்தியாசமும் கிடையாது. அதாவது, 'அவன்,' 'அவள்' என்ற பாகுபாடு கிடையாது. சமூகத்துல இருக்குற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் அந்தப் பள்ளியில் தெரியவே தெரியாது. அப்படி ஒண்ணு இருக்கக்கூடாதுங்கறதுல அந்த ஸ்கூல் கவனமா இருக்கு. அதனால, அதுக்கேத்தா மாதிரி கல்வி முறை, வகுப்புல நடந்துகொள்ளும் முறை, மாணவர்களே தங்களுக்குள்ள பேசிக்கொள்ளும்போதுகூட இந்த மாதிரி பழைய முறைகளைப் பின்பற்றாமல் பார்த்துக்கொள்வது என்று வித்தியாசமா நடத்தறாங்க…”
”பாடங்கள் சொல்லிக் கொடுக்கறதுல தான் வித்தியாசம்ன்னா, அதைச் சொல்லிக்கொடுக்கும் இடங்கள்லேயும் வித்தியாசம் நிறைய இருக்கே மிஸ்…”
”சூழலோட சேர்ந்ததுதானே கல்வி. வகுப்பறைகளை வித்தியாசப்படுத்தினாலே, பெரிய மாற்றங்கள் ஏற்படும்ங்கறது நம்பிக்கை.”
உண்மைதான் என்று நானும் நினைத்துக்கொண்டேன். கூடத்தில் உட்கார்ந்து படிப்பதற்கும், மொட்டை மாடியில் உட்கார்ந்து படிப்பதற்குமே வித்தியாசம் இருக்கும்போது, இங்கே ஏற்படாதா என்ன?

