PUBLISHED ON : டிச 09, 2019

சாதனை : கழிப்பறை, மதுவிலக்கு, எரிமேடை
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையத்திலுள்ள தொரப்பாடி (துரைப்பாடி) கிராமத் தலைவர் கஸ்தூரி ராஜகோபாலனைச் சந்தித்துப் பேசினோம்:
பதவிக்கு வந்தவுடன் நீங்க செஞ்ச விஷயங்கள் என்னென்ன?
எங்க கிராமத்தில் எங்க பார்த்தாலும் குப்பை, கழிவுகள்னு ஒரே அசுத்தமாக இருக்கும். இங்க வர்றவங்க இதப் பார்த்து நிச்சயம் முகம் சுளிப்பாங்க. அதை மாத்தணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காக எங்க ஊர்ல இருக்கிற எல்லா பெண்களிடமும் கழிப்பறையின் அவசியம் பத்தி கிராமசபைக் கூட்டம், பஞ்சாயத்துக் கூட்டம், வீடுவீடாகப்போய் பேசறதுன்னு பெண்களை ஒன்று திரட்டினோம். அவங்களுக்கு விழிப்புணர்வு கிடைச்சது. கிராமத்துல அனைத்து தெருக்களிலும் குப்பைத்தொட்டிகளை அமைச்சோம். வீடுகளில் கழிப்பறை கட்ட வலியுறுத்தினோம்.
பெண்கள் தலைவரா இருந்தா ஏதேனும் பிரச்னைகள் வருமா?
ஏன் வராது? பதவிக்காலத்தை முழுசா நிறைவு செய்யறதே பெரும்பாடுதான். பல நாட்கள் பஞ்சாயத்து வளாகத்துக்கு பூட்டுப்போட்டு மூடிடுவாங்க. பிரச்னைகளுக்குத் தீர்வுசொல்ல விடமாட்டங்க. அரசு தரும் பணத்தை முக்கிய பிரச்னைகளுக்குச் செலவுசெய்ய விடாமல் தடுப்பாங்க.
எங்க கிராமத்துல கள்ளச் சந்தையில் டாஸ்மாக் மதுபானங்களை வித்தாங்க. இதனால கணவன் - மனைவி இடையே சண்டை, தெருக்களில் கலாட்டா செய்வது, பெண்களைக் கேலி செய்றதுன்னு குடியால கிராமமே நிம்மதியா இல்ல.
பெண்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, சட்டவிரோத மதுக்கடைகளை மூடப் போராடினோம். அந்த முயற்சியில் எனக்கு அடி, உதை, குத்து எல்லாமும் கிடைச்சது. அதையெல்லாம் மீறி, போராடி, ஊருக்குள்ள சாராயத்தை விற்கவிடாம செஞ்சுட்டோம். இப்ப எங்க ஊரு ஆண்களும், குடிக்கற பழக்கத்தைக் குறைச்சுட்டாங்க.
உங்க ஊர்ல எரிமேடை இல்லையாமே?
ஆமாம். முன்னாடி இல்லை. இப்போ எங்க கிராமத்துக்கு தனியா எரிமேடை ஏற்படுத்திக் கொடுத்திருக்கேன். அதைச்சுத்தி சுவர் எழுப்பி இருக்கோம். அதனால எந்தவித சுற்றுச்சூழல் பிரச்னையும் வர்றது கிடையாது. அதே மாதிரி தெருவுக்குத் தெரு ஆழ்துளைக் கிணறு அமைச்சு, தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செஞ்சிருக்கோம். ஊருக்குன்னு ஒரு கிணறும் அமைச்சிருக்கோம். முன்னாடில்லாம் தண்ணீருக்காக எங்க கிராமத்துல பெரிய அளவில சண்டை வரும். அதுக்காக போலீஸுக்குப்போன காலம் உண்டு. இப்ப யாருக்கும் சண்டை வராத அளவுக்கு மாத்தியாச்சு.
