PUBLISHED ON : டிச 09, 2019

சாதனை : மின்சாரத் தன்னிறைவு
“முதலில் நான் ஒரு முழுநேர விவசாயி. அரசு கொடுக்கும் நிதியை ஊழல் இல்லாமல் பயன்படுத்தினால், பத்தே ஆண்டுகளில் நூறு ஆண்டுகளுக்கான மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.” என்று பேசத் தொடங்கினார் கோவை மாவட்டம், நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஓடந்துறை முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சண்முகம். தொடர்ந்து அவரிடம் பேசினோம்:
“1996இல் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பதவிக்கு வந்ததும், செய்ய நினைச்ச முதல் விஷயம், தடையில்லாத குடிநீர். தண்ணீருக்காக மக்கள் அலைஞ்சு திரியக்கூடாதுன்னு முடிவு செய்தேன். பஞ்சாயத்தின் கீழ இருந்த எட்டு கிராமங்களுக்கும் எட்டு தண்ணீர் டேங்குகளை, ஒரே ஆண்டுல அமைச்சுக் கொடுத்தோம்.
அடுத்ததா, பஞ்சயத்துக்கான மின்சாரக் கட்டணச் செலவைச் சமாளிக்க, சொந்தமா காற்றாலை அமைக்க முடிவுசெய்து, வங்கியில் கடன் வாங்கி அதையும் வெற்றிகரமாக மக்கள் பங்களிப்புடன் செயற்படுத்தினோம். ஊரின் தேவைபோக மீதம் உள்ளதை மின்சார வாரியத்துக்கு விற்று, கடனை அடைத்து வருகிறோம்.
எங்கள் கிராமத்தில் மாணவர்கள் நூறு சதவீத கல்வியறிவு பெற்றுள்ளார்கள். இடைநின்ற மாணவர் என்று ஒருவரும் இல்லை.
2006ஆம் ஆண்டு வரைக்கும் பொதுப் பஞ்சாயத்தாக இருந்த ஓடந்துறையை பெண்களுக்கான தொகுதியாக ஒதுக்கினர். என் மனைவி லிங்கம்மாளை கிராம மக்கள் சேர்ந்து தலைவியாகத் தேர்ந்தெடுத்தனர்.
எங்கள் இருவரின் பதவிக் காலத்திலும் பல எதிர்ப்புகளைக் கடந்து, நிலம் இல்லாதவர்களுக்கு, நிலத்துடன் வீட்டைச் சொந்தமாக்கிக் கொடுத்திருக்கிறோம். மொத்தம் 850 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம். அதிலும் ஒரே இடத்தில் 101 பசுமை வீடுகள் கட்டிக்கொடுத்த தமிழகத்தின் ஒரே பஞ்சாயத்து ஓடந்துறை மட்டுமே.
எல்லா திட்டங்களின் பலனும் 100 சதவீதம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்ற எங்களின் தொலைநோக்குப் பார்வைதான் அத்தனை சாதனைகளுக்கும் காரணம்!”
மாநில அரசின் சிறந்த ஊராட்சி விருது, நிர்மல் கிராம் புரஸ்கார், ராஜீவ்காந்தி சுற்றுச்சூழல் விருது, உத்தமர் காந்தி விருது என, பல விருதுகளைப் பெற்றுள்ள ஓடந்துறையை உலகமே வியந்து அண்ணாந்து பார்க்கிறது.
