PUBLISHED ON : டிச 05, 2016
பூமியில் அதிக அளவில் நன்னீர், பனி ஆறுகளில்தான் இருப்பு உள்ளது (Glacier - கிளாசியர்). ஒரு குறிப்பிட்ட இடத்தில், பனிப் பொழிவின் வேகம், நீர் ஆவியாதலின் வேகத்தை விட அதிகமாக இருந்தால், அங்கு பனி ஆறு உருவாகும். உலகில் உள்ள மொத்த தண்ணீர் அளவில், கடல்களுக்கு அடுத்தபடியாக, அதிக அளவு தண்ணீர், பனி ஆறுகளில்தான் உள்ளது. துருவப் பகுதிகளின் பெரும் பகுதி, பனி ஆறுகளால் மூடப்பட்டிருக்கிறது. வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மலைப் பகுதிகளின் உச்சியிலும், பனி ஆறுகள் உருவாகின்றன.
பனிக்கட்டி உருகி, புவி ஈர்ப்பு காரணமாக மெதுவாக நகரத் தொடங்குவதால், பனி ஆறு உருவாகிறது. இது நிலப்பரப்புகளில் மட்டுமே உருவாகும். கடல், ஏரி போன்ற பகுதிகளில், உருவாகும் பனி ஆற்றில் இருந்து இது வேறுபடும். குளிர் காலத்தில் உறைநிலையிலும், கோடை காலத்தில் உருகுநிலையிலும் காணப்படும். பனி ஆற்றின் நகரும் வேகம், புவி வெப்பம், உராய்வு ஆகிய காரணங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் உராய்வுத் தன்மை காரணமாக, நிலப்பரப்பில் அரிப்பு ஏற்படுகிறது.
உராய்வின்போது, ஆற்றின் அடிப்பகுதி மெதுவாகவும், மேல்பகுதி விரைவாகவும் நகரும். பள்ளத்தாக்கு பகுதியில், ஓரப்பகுதி மெதுவாகவும், நடுப்பகுதி விரைவாகவும் நகரும். காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால், பனி ஆறுகள் உருகுவது அதிகரிக்கிறது. கிரீன்லாந்து, அண்டார்டிகா போன்ற பகுதிகளில் உள்ள பனி படலங்கள் உருகினால், உலக அளவில் கடல் மட்டம் 70 மீட்டர் வரை உயரும் ஆபத்து உள்ளதாக, விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பனி ஆறுகளை அவற்றின் புறத்தோற்றம், வெப்ப இயல்பு ஆகியவற்றைக் கொண்டு வகைப்படுத்தலாம்.
மலை பனி ஆறு: மலைகளின் உச்சியிலும் சரிவுகளிலும் உருவாகும்
பள்ளத்தாக்கு பனி ஆறு: பள்ளத்தாக்குகளில் நிரம்பும் பனி ஆறு
பனிக்கவிகை: மலைத்தொடரையோ, எரிமலையையோ மூடியிருக்கும். இவற்றின் பரப்பளவு 50, ஆயிரம் சதுர கி.மீ.
பனிப் படலம்: 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கும் மேல் பரப்பளவு கொண்டவை. இவற்றின் ஆழம் பல கிலோ மீட்டருக்கு இருக்கும்.
உலகில் தற்போது, இரண்டு பனிப் படலங்கள் மட்டுமே உள்ளன. இவை அண்டார்டிகா, கிரீன்லாந்து பகுதிகளில் உள்ளன. இங்குதான் அதிக அளவு நன்னீர் உள்ளது.
பனிப் புகலிடம்: கடற்பகுதிக்குள் நீண்டிருக்கும் பனிப் படலம். இவை மெலிதாகவும், குறைந்த வேகத்துடனும் இருக்கும்.
பனி நீரோடை: குறுகிய, வேகமாக நகரும் பனிப் படலம். அண்டார்டிகாவில் பல பனி நீரோடைகள் உள்ளன. இவற்றில் சில, கடலில் உள்ள பனிப் புகலிடத்தில் முடிவடைகின்றன. இப்படி கடலில் முடிவடையும் பனி ஆறுகளில் உள்ள பனிக்கட்டி, கடலை நெருங்கியதும் உடைந்து பனிப்பாறை உருவாகிறது.
மிதவெப்ப நில பனி ஆறு: மித வெப்ப நிலங்களில் உள்ள, உயர்ந்த மலைகளில் இருக்கும். ஆண்டு முழுவதும் உருகிக் கொண்டே இருக்கும்.
ப. கோபாலகிருஷ்ணன்
