
ஆரஞ்சு (Orange) பழத்திற்குத்தான் கடவுளின் பழம் என்னும் பெருமை! ஆரஞ்சு அதிக அளவில் பழச்சாறாகப் (Juice) பயன்படுத்தப்படுகிறது. ஜாம், ஊறுகாய், மிட்டாய் போன்ற பொருட்கள் தயாரிப்பிலும் உதவுகிறது. இதில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது சிட்ரிக் அமிலம் நிறைந்தது.
ஆரஞ்சு என்ற வார்த்தை நாரங்கா (Naranga) என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்தது. நாரங்காயின் மூலச் சொல், நார்த்தங்காய் என்ற தமிழ்ச் சொல்லாக இருக்கலாம் என்கிறார்கள்.
ஆரஞ்சில் 600 வகைகள் உண்டு. ஆரஞ்சு மரம், 33 அடி உயரம்வரை வளரக்கூடியது. 50 வருடங்கள் வரை வாழும். வாழ்நாளில் 60,000 மலர்கள் வரை பூக்கும்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் மலராக வெண்மை நிற ஆரஞ்சு மலர் உள்ளது. இந்த வெண் பூக்கள் விழாக்களில் அலங்காரத்திற்கும், திருமணச் சடங்குகளில் தலையில் கிரீடமாகவும் சூட்டப்படுகிறது. நறுமணம் மிக்க இந்தப் பூவில் இருந்து வாசனைத் திரவியம் தயாரிக்கப்படுகிறது.
இதன் தோல் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆரஞ்சு அஜீரணத்தை சரி செய்யும். இதற்கு, 'தங்க ஆப்பிள்' என்றும் ஒரு செல்லப் பெயர் உண்டு.
பிரேசில், அமெரிக்கா, சீனா, ஆரஞ்சு விளைச்சலில் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. இந்தியாவுக்கு இதில் நான்காம் இடம்.

