PUBLISHED ON : மே 02, 2016

வண்ணங்களைக் கொண்டு நுணுக்கமான ஓவியங்களைத் தீட்ட எல்லோருக்கும் விருப்பம் உண்டு. ஆனால் ஒரு சிலரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். எளிமையான வடிவங்களைப் புதுமையான பொருட்கள் கொண்டு வரைவது எல்லோருக்கும் சாத்தியம். இந்த வாரம் பசையைக் கொண்டு, உலோக முலாம் பூசிய தோற்றத்தில் வரையப் போகிறோம்.
தேவையான பொருட்கள்: அழுத்தமான சார்ட் அட்டை, ஃபெவிக்கால் பசை, கருப்பு, தங்க நிற அக்ரலிக் பெயின்ட், பெயின்ட் பிரஷ், டிஷ்யு பேப்பர்.
1. சார்ட் பேப்பரில் எழுத்துகளையும் எளிமையான வடிவங்களையும் பென்சிலால் வரைந்து கொள்ளுங்கள்.
2. பென்சில் கோடுகளின் மேல், ஃபெவிக்கால் பசையால் அச்சு வரைய வேண்டும்.
3. பசை குறைந்தது ஏழு எட்டு மணிநேரம் காய்ந்த பிறகு, ஒளி புகும் அச்சுகளாக மாறிவிடும். அதன்பிறகு சார்ட் முழுவதும் கருப்பு நிற அக்ரலிக் பெயின்டைத் தீட்ட வேண்டும்.
4. கருப்பு வண்ணம் காய்ந்த பிறகு, தங்க நிற அக்ரலிக் பெயின்டை டிஷ்யு பேப்பரில் ஒற்றி எடுத்து, எழுத்துகள் மற்றும் வடிவங்கள் மீது தீட்ட வேண்டும். எழுத்துகளுக்கு வெளியில் தங்க நிறம் ஒட்டிக்கொண்டால் கருப்பு பெயின்ட் பூசி சரி செய்யலாம்.
உலோகத்தால் பொறித்தது போல நீங்கள் வரைந்த வடிவங்கள் மின்னும்!
உங்கள் பெயர்களை எழுதிப் பெயர்ப்பலகைகூட தயாரிக்கலாம்!
-ஓவியா டீச்சர்
