ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் இந்தியாவில் வளர்ச்சி வேகமாகுமா?
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் இந்தியாவில் வளர்ச்சி வேகமாகுமா?
PUBLISHED ON : நவ 07, 2016
சரக்கு- சேவை வரி (ஜி.எஸ்.டி.- குட்ஸ் சர்வீசஸ் டாக்ஸ்) நமது நாட்டில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைந்த அளவில் வரி விதிக்கப்படும். ஆடம்பர பொருட்கள், புகையிலை, குளிர்பானம் போன்ற பொருட்களுக்கும் அதிகமாக வரி விதிக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். அந்தவகையில், சரக்கு- சேவை வரியை (ஜி.எஸ்.டி.- குட்ஸ் சர்வீசஸ் டாக்ஸ்) நான்கு அடுக்குகளாக விதிக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதாவது 5, 12, 18, 28 என்ற சதவீத அடிப்படையில் விதிக்க, ஜி.எஸ்.டி. குழு இறுதியாக தீர்மானித்து உள்ளது. இது, அடுத்த நிதி ஆண்டு (ஏப்ரல் 2017) முதல் அமலுக்கு வரும்.
ஜி.எஸ்.டி. என்றால் என்ன?
வரிகள் விதிப்பு முறையை ஒருமுனையில் இணைப்பது. இதனால், நாடு முழுவதும் பொருட்கள் விலை ஒரே சீராக விற்கப்படும். நிர்ணயம் செய்யப்பட்ட வரி விகிதத்தை மட்டுமே உற்பத்தியாளர் செலுத்த வேண்டும். பலமுனைகளில் வரிகளை செலுத்த வேண்டாம். ஒரு நாடு, ஒரு மாதிரி வரி விதிப்பு முறை என்பதுதான் இதன் சுருக்கம்.
குஜராத் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள், தமிழகத்தில் விற்கப்படுகின்றன. அந்த ஆடை, பல மாநிலங்களை கடந்து, தமிழகம் வர வேண்டும். பொருட்களை கொண்டு வரும்போது, ஒவ்வொரு மாநிலத்திலும் சேவை வரி செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தி கொண்டு வரப்படும் பொருளை, இங்கு விற்க விற்பனை வரி செலுத்த வேண்டும். இவை அனைத்தும், உற்பத்தி பொருட்கள் மீது ஏற்றப்படுகிறது. இதனால், செலுத்திய வரிக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
வரி செலுத்தும் தொகை, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். வரி விதிப்பை அந்தந்த மாநிலங்கள்தான் நிர்ணயம் செய்து வருகின்றன. இப்படி தொடர்ச்சியாக பல இடங்களில் வரிகள் செலுத்துவதை முறைப்படுத்த, உற்பத்தியாளர்கள் அரசை வலியுறுத்தினர். இதன் அடிப்படையில், நாடு முழுவதும் உற்பத்தி பொருட்களுக்கு, மத்திய அரசே வரி விதிப்பை தீர்மானிக்க முடிவு செய்து, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. வரியை, அரசு ஒரே நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்தபின், சீரற்ற விலை இருக்காது.
ஜி.எஸ்.டி. மசோதாவிற்கு சில மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தால், மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று அவை தெரிவித்தன. பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.
தமிழகம் எதிர்ப்பது ஏன்?
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அதிகம். அவற்றை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யும்போது, இரண்டு சதவீதம் விற்பனை வரி விதிக்கப்படுகிறது. இது, தமிழக அரசுக்கு பெரும் வருவாய். ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தால், தமிழகத்துக்கான வருவாய் சரியும் என்ற அச்சம் உள்ளது. இதனால், துவக்கம் முதலே தமிழகம் எதிர்த்து வருகிறது. ஆனால், ஜி.எஸ்.டி.யால் ஏற்படும் வருவாய் இழப்பை, மத்திய அரசு ஈடு செய்யும் என, ஜி.எஸ்.டி. குழு கூறியிருக்கிறது.
ஒருங்கிணைந்த வரி விதிப்பா?
நாடு முழுவதும் ஒரே மாதிரி வரி விதிப்பு முறை என்று, ஜி.எஸ்.டி.யை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதில் மறைமுகமான வரிகள் இருக்கும் என்ற கருத்தும் உள்ளது. மதிப்புக்கூட்டு வரிக்கு எதிராக (VAT- வாட்- - வால்யூ ஆடட் டாக்ஸ்) முன்பு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதே சர்ச்சைகள் ஜி.எஸ்.டி.க்கு எதிராகவும் எழுகின்றன. நாம் ஒரு பொருளை வாங்கும்போது, வரியை, விலையுடன் சேர்த்தே கொடுக்கிறோம்.
வரும் ஏப்ரல் 1 முதல், ஜி.எஸ்.டி. அமலுக்கு வர உள்ளது. அப்போது, பொருட்களின் விலை, சற்று உயரக்கூடும் என்ற வாதமும் உள்ளது. படிப்படியாக இந்த நிலை மாறும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி இந்த வரி வருவாயில் உயர்ந்தால், அது சிறப்பானது.
கடந்து வந்த பாதை
* ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த, காங்கிரஸ் தலைமையிலான அரசு, 2006ல் முடிவெடுத்தது.
* மத்தியில் உள்ள தற்போதைய பா.ஜ. அரசு, ஜி.எஸ்.டி.யை நிறைவேற்ற மசோதாவை, மக்களவையில் தீர்மானம் நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் எதிர்ப்புகள் ஏற்பட்டதால், சுணங்கியது.
* பல்வேறு கட்டங்களைத் தாண்டி, கடந்த ஆகஸ்ட் 2016ல், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

