PUBLISHED ON : நவ 07, 2016
மேரி க்யூரி வாழ்ந்த காலம்
7.11.1867 - 1.07.1934
பிறந்த ஊர்: வார்சா, போலந்து
சாதனை: இரண்டு நோபல் பரிசுகள்
உலகில் உயரிய கெளவரமாகக் கருதப்படுவது, நோபல் பரிசு. இதை, இரண்டு முறை வென்று வரலாறு படைத்தார் மேரி க்யூரி. அதுவும் வெவ்வேறு துறைகளில் சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
க்யூரிக்கும், அவரது அக்கா ப்ரானிஸ்லாவா (Bronisława) வுக்கும் மருத்துவம் படிக்க ஆசை. அவர்கள் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டனர். க்யூரி வேலை செய்து, அக்காவைப் படிக்கவைப்பது; பிறகு, அக்கா வேலைக்குப் போய், க்யூரியை படிக்கவைப்பது. முதலில் அக்கா படிப்புக்கு பாரீஸ் சென்றார். அவருக்கு உதவ, ஒரு வீட்டில் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தார் க்யூரி. இப்படி ஆறு ஆண்டுகளாக பணம் அனுப்பினார். அதன்பிறகு, அக்காவின் அழைப்பை ஏற்று, பாரீஸ் சென்றார். அங்கு பல்கலைக்கழகத்தில், இயற்பியல், வேதியியல், கணிதம் பயின்றார்.
அங்குதான், ஆராய்ச்சியாளர் பியரி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். வாழ்விலும் அவருடன் இணைந்தார். அந்த சமயம், எக்ஸ் கதிர்களை ஆராய்ந்துவந்த விஞ்ஞானி பெக்கரெல், அந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளும் பணியை, இவர்களிடம் ஒப்படைத்தார். இருவரும் இணைந்து ஆராய்ச்சியை தொடர்ந்தனர்.
ஆராய்ச்சிக்குத் தேவையான யுரேனியத்தின் விலை அதிகமாக இருந்தது. அதற்கான உபகரணங்களும் இவர்களிடம் இல்லை. மண்ணைக் கரைத்து, கொதிக்கவைத்து பக்குவம் செய்து, சளைக்காமல் ஆய்வு செய்தார்கள். யுரேனிய கதிர் போல 300 மடங்கு ஆற்றல் கொண்ட கதிர்களைக் கண்டறிந்தனர்.
அந்தக் கதிர்களால், க்யூரியின் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது.
யுரேனியக் கழிவில் இருந்து, பொலோனியம் தனிமத்தை, க்யூரி கண்டறிந்தார். அந்த ஆய்வுகளில் இருந்து, கதிரியக்க ஆராய்ச்சிகளுக்காக, பெக்கரெல் மற்றும் க்யூரி தம்பதிக்கு, 1903ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. ரேடியம் மற்றும் அதனுடைய கூட்டுப் பொருளின் படிவங்களைப் பிரித்து, புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ரேடியம் தனிமத்தை தனியாகப் பிரித்தார். இதற்காக, 1911ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

