PUBLISHED ON : செப் 23, 2019

சுற்றுலா செல்வது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? கிணற்றுத் தவளைகளாக ஓரிடத்தில் மட்டுமே வாழ்ந்தால், உலகின் மற்ற சுவாரசியங்களை நாம் அனுபவிக்கவே முடியாது. இந்த உலகில் எல்லா இடங்களிலும், ஏதாவது சுவாரசியங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
அமெரிக்காவும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளும் பலரது கனவு சுற்றுலா பகுதிகளாக உள்ளன. உலக வரைபடத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் பார்த்துவிட வேண்டும் என, பலரும் பட்டியல் போடுவார்கள். ஒவ்வோராண்டும் தவறாமல் சுற்றுலா செல்வார்கள்.
1980இல் இருந்து உலக சுற்றுலா நிறுவனம், ஆண்டுதோறும் செப்டம்பர் 27ஆம் நாளை சுற்றுலா தினமாகக் கொண்டாட ஊக்குவிக்கிறது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பிற சமூகங்களின் கலாசாரம், பழக்கவழக்கம், மொழி, அரசியல் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளவும் இந்த நாள் உதவும். உலக சுற்றுலா நிறுவனம், ஆண்டுதோறும் ஒரு நாட்டைத் தேர்வு செய்யும்.
அந்த நாட்டிலுள்ள சுற்றுலா தலங்கள் பற்றி மக்களுக்கு, பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இலங்கையில் போருக்குப் பின் சுற்றுலா தொழில், மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, மக்கள் மீண்டும் எந்தவித அச்சமுமின்றி இலங்கையில் சுற்றுலா வருவதற்காக, சுற்றுலா நிறுவனம் இலங்கையைத் தேர்வு செய்தது.
மேலும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையிலும், சுற்றுலாவிற்கான நாடுகள் தேர்வு செய்யப்படும். ஏனெனில், சுற்றுலா, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சரி, இவை அனைத்துமே பொதுவான விஷயங்கள். சுற்றுலாவால் நமக்கு என்ன பயன்?
1. நமக்குப் பழக்கமான ஒரு விஷயத்தில் இருந்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முன்வருவோம்.
2. படிப்பு, வேலை, வீட்டு வேலை என, எப்போதும் பம்பரமாகச் சுற்றும் நமக்கு ஓய்வு கிடைக்கும். இதனால், மன அழுத்தம் குறையும்.
3. புது இடம், உணவு வகைகள், மக்கள் என, அனைத்துமே புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
4. குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிடலாம்.
5. புதிய சாகசங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
நம்முடைய தினசரி வாழ்க்கையில் இருந்து ஓய்வு கிடைக்கும். உலக நாடுகளுக்குத்தான் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது இல்லை; நம் ஊரிலேயே பார்க்காத எத்தனையோ இடங்கள் இருக்கும்.
நிச்சயம் அதுமாதிரியான இடங்களுக்குச் செல்லலாம். பயணங்கள் எப்போதுமே நமக்கு நல்ல பாடங்களையும், மகிழ்ச்சியையும் வழங்குபவை.

