PUBLISHED ON : செப் 23, 2019

உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 28ஆம் நாள், பசுமை நுகர்வோர் நாளாக அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பொருட்களை மக்கள் பயன்படுத்தக்கூடாது என்பதை மையமாக வைத்து, இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகள் பிளாஸ்டிக் பொருட்களைத் தடைசெய்வது, மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வது என, இயற்கைக்குச் சாதகமாகப் பணிகளைச் செய்து வருகின்றன.
நாம் பயன்படுத்தும் பொருட்கள், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களாக இருக்க வேண்டும் என, பசுமை நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்புக்கு எல்லா நாட்டிலும் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டர்கள் இருக்கின்றனர். நகரங்கள், கிராமங்கள், பெரு நகரங்கள் என, மக்கள் வசிக்கும் பகுதிகளில், பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக, இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்குவதற்கு நுகர்வோர் முன்வருகின்றனர்.
நுகர்வோர் விழிப்புணர்வு பெற்று, பிளாஸ்டிக் பொருட்களை வாங்க மறுத்தால்தான் அவற்றின் தயாரிப்பை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக, மக்களிடம் கடைகளுக்குச் செல்லும்போது, துணிப்பைகளைச் எடுத்துச் செல்லும் பழக்கம் உருவாகியுள்ளது. உற்பத்தியாளர்களை மாற்றுவதைவிட கோடிக்கணக்கான நுகர்வோர்கள் மாறும்போது, உற்பத்தியாளர்களும் மாற்றுப் பொருட்களைத் தயாரிக்க முன்வருவார்கள்.
பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமல்ல; நாம் உண்ணும் உணவும் தரமானதாக இருக்க வேண்டும். இரசாயனப் பொருட்கள் கலந்து வரும் காய்கறிகள், பழங்களை நாம் வாங்காமல் இருக்க வேண்டும். இயற்கையான முறையில் உற்பத்தியான காய்கறிகளை, பழங்களை வாங்கினால், உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவிதப் பிரச்னையும் வராது. சுற்றமும் நாமும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் புத்திசாலி நுகர்வோர்களாக இருப்போம்!

