PUBLISHED ON : நவ 14, 2016
சாமி கும்பிடச் செல்லும் சாக்கில், பாடல்களை பாடி விடுதலைப் போராட்டத்தை தூண்டியவர் அம்புஜம்.
ஆங்கிலேயர் ஆட்சியில், இவரது தாய்வழி தாத்தா சர்.வி. பாஷ்யம் உயர் நீதிமன்ற நீதிபதி. தந்தை சீனிவாசன், அட்வகேட் ஜெனரல். படிப்பறிவும், செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் அம்புஜம். தம்பியை பள்ளிக்கு அனுப்பியதைப் பார்த்து, தானும் பள்ளி செல்ல ஆசைப்பட்டார். பெற்றோர் அவரின் கல்வி பற்றி, அக்கறை கொள்ளவில்லை. குடும்பத்தில் ஆண்கள் படித்தால் போதும் என, முடிவு செய்தனர்.
அம்புஜம் சும்மா இருக்கவில்லை. பள்ளிக்கு அனுப்பும்படி கெஞ்சிக் கேட்டார். அவரின் கோரிக்கையை பெற்றோர் ஏற்றனர். ஆனால், பள்ளியில் அவரை சேர்க்கவில்லை; ஆசிரியரை வீட்டுக்கு வரவழைத்து, கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தனர்.
அந்த கால வழக்கப்படி, 12 வயதிலேயே அம்புஜம் திருமணம் நடந்தது. உலகப்போரில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு, மருந்துகள், துணிகள் சேகரித்து அனுப்பும் பணியில் அக்கம்பக்கத்து பெண்களுடன் சேர்ந்து ஈடுபட்டார்.
அந்த மகளிர் குழுவினரோடு, மார்கழி மாதத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு செல்வார். வழிநெடுக பக்திப்பாடல் பாடுவதற்கு பதிலாக, விடுதலை வேட்கை, தேசபக்தி பாடல்களைப் பாடியபடி, பார்த்தசாரதி கோவிலைச் சுற்றி வருவார். இதை அறிந்த ஆங்கிலேய காவல்துறை, மகளிர் குழுவினரைக் கைது செய்தது. அட்வகேட் ஜெனரலின் மகள் என்பதால், அம்புஜத்தை கைது செய்யவில்லை. இதை அறிந்த அம்புஜம், தன் தந்தை வீட்டுக்குச் செல்லாமல், சித்தி வீட்டிற்குச் சென்றார்.
கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1932ல், தன் சித்தியுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்.
காந்தியின் அழைப்பு
அம்புஜத்தின் போர்க்குணம் கண்டு வியந்தார் காந்தியடிகள். அவரை அழைத்து பெருமைப்படுத்தினார். அங்கு துளசி ராமாயணத்தை இசையோடு பாடினார் அம்புஜம். பின்னர் துளசி ராமாயணத்தின் இரண்டு பாகங்களை, தமிழில் மொழி பெயர்த்தார். சென்னையில், சீனிவாச காந்தி நிலையம் என்ற பெண்கள் பள்ளியை, அம்புஜம் உருவாக்கினார். தமிழகத்தில் சமூகநல வாரியத்தலைவியாக, ஏழு ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். இந்திய அரசு 1964ல் 'பத்மஸ்ரீ' விருது வழங்கி சிறப்பித்தது.
மூவேந்தர்கள் என்று சேர, சோழ, பாண்டியர்கள் அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கென்று தனித்தனியாக குடிப்பெயர்கள் உள்ளன. வில்லவன், வானவன், வானவரம்பன், இமயவரம்பன், குட்டுவன், குடக்கோ, பொறையன் ஆகியவை சேர அரசமரபுக்குரிய பெயர்கள். சோழ மன்னர்கள் செம்பியன், வளவன், சென்னி, கிள்ளி என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். பாண்டியர்கள் வழுதி, மாறன், செழியன் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டார்கள்.
- இரத்தின புகழேந்தி

