PUBLISHED ON : ஜூன் 18, 2018

தமிழ்நாட்டின் வரலாற்றை, பண்பாட்டை வளப்படுத்திய ஆளுமைகளில் குறிப்பிடத் தகுந்தவர் பன்முகத்தன்மை மிக்கவர், தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்.
தூய்மை, எளிமை, புதுமை என்ற மூன்று நற்பண்புகளாகவே வாழ்ந்து காட்டியவர். உயரிய மனிதப் பண்புகளை அணிகலனாகக் கொண்டவர்.
கலப்புத் திருமணத்திற்கும், விதவை மறுமணத்திற்கும் ஊக்கம் தந்தவர்.
பெண்களுக்கு சொத்துரிமை கிடைப்பதற்காகப் பாடுபட்டவர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்று வாதிட்டவர்.
கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர். குழந்தைத் திருமணத்தை எதிர்த்தவர்.
தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என பல்வேறு பெருமைகளுக்கு உரியவர் திரு.வி.க.
கமலாம்பிகை என்பவரை 1912-இல் திருமணம் செய்துகொண்டார். அவர், ''தனக்குக் கல்வி போதிக்க வேண்டும்'' என்று தன் கணவரிடம் கோரிக்கை வைத்தார்.
''நீ பொன், புடவைகளைக் கேட்காமல், கல்வியைக் கேட்கிறாயே'' என்று மகிழ்ந்து தன் மனைவிக்குத் தமிழ் கற்பித்தார் .
பெண்களைப் பெரிதும் மதித்தவர். எந்த வேலையையும் கெளரவம் பார்க்காமல் செய்யக்கூடியவர்.
திருவல்லிக்கேணியில் நடந்த சிவனடியார் விழாவில், அனைவருக்கும் உணவளிக்கப்பட்டது. சாப்பிட்டவர்களின் எச்சில் இலைகளை எடுக்க ஆள் இல்லாததைக் கண்ட திரு.வி.க. தானே இலைகளை எடுக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்த சிலரும் அந்த வேலையில் இறங்கினர்.
திரு.வி.க-.வின் பள்ளித் தோழரான ஏகாம்பரம் என்பவருக்கு பெரிய அம்மை வார்த்தது. அம்மை போட்டவர்கள் அருகில் செல்லக்கூடாது என்று பயம் கொண்டிருந்த காலம் அது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் அவருக்கு உதவினார் திரு.வி.க.
காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம் என்ற சிற்றூரில் 26.8.1883இல் பிறந்தார். 17.9.1953இல் மறைந்தார்.
இதில் ஒன்று மட்டும் திரு.வி.க. எழுதிய நூல் அல்ல. அது எது?
1. இருளில் ஒளி
2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
3. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
4. நாயன்மார் வரலாறு
5. முடியா? காதலா? சீர்திருத்தமா?
6. உள்ளொளி
7. சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து
8. தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு
9. பாஞ்சாலி சபதம்
10. இந்தியாவும் விடுதலையும்
11. தமிழ்க்கலை
விடை
பாஞ்சாலி சபதம். எழுதியவர் சுப்பிரமணிய பாரதியார்.
எது சரியான விடை?
1. ஈ.வெ.ராமசாமிக்கு வைக்கம் வீரர் என்னும் பெயரைச் சூட்டியவர் திரு.வி.க.
o ஆம் o இல்லை
2. திரு.வி.க. கொச்சைச் சொற்களையோ, வசைச் சொற்களையோ கையாள மாட்டார்.
o ஆம் o இல்லை
3. அவர் பேசுவதுபோல எழுத மாட்டார். எழுதுவதுபோல பேச மாட்டார்.
o ஆம் o இல்லை
4. தமிழகத்தில் காந்தியடிகள் கலந்து கொள்ளும் கூட்டங்களின் உரையை திரு.வி.க.தான் மொழிபெயர்ப்பார்.
o ஆம் o இல்லை
5. தம் வாழ்க்கை வரலாற்றை, 'திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்' என்னும் நூலாக அவர் எழுதி வெளியிடவில்லை.
o ஆம் o இல்லை
6. இவர் உரைநடைக்கு ஆற்றிய தொண்டால், 'உரைநடைக் கம்பர்' என்று போற்றப்படுகிறார்
o ஆம் o இல்லை
7. இவரின் முன்னோர் திருவாரூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், 'திரு' என்ற அடைமொழியைத் தம் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொண்டார்.
o ஆம் o இல்லை
8. மனைவி கமலாம்பிகை இறந்ததும், மறுமணம் செய்துகொண்டார்
o ஆம் o இல்லை
9. வங்காள மொழியில் வெளியான நாளிதழான 'வந்தே மாதரம்' என்ற பத்திரிகையை தொழிற்சாலைக்கு எடுத்து வந்ததற்காக, வேலையை விட்டு நீக்கப்பட்டார்.
o ஆம் o இல்லை
10. தமிழக அரசு ஆண்டுதோறும் திரு.வி.க. பெயரில் சிறந்த எழுத்தாளர் ஒருவருக்கு விருது வழங்குகிறது.
o ஆம் o இல்லை
விடைகள்
1.ஆம். 2. ஆம். 3. இல்லை.4. ஆம். 5. இல்லை. 6. ஆம். 7. ஆம். 8. இல்லை 9. ஆம். 10. ஆம்.
விடுபட்ட இடங்களை நிரப்பு
1. திரு.வி.க.வின் தமிழ் ஆசான் ......................
2. திரு.வி.க.விற்கு ...............மொழியும் தெரியும்.
3. திரு.வி.கல்யாணசுந்தரனார் நடத்திய இரண்டு பத்திரிகைகள் ................ ..............
4. 'எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்' என்று முழங்கியதற்காக அவருக்கு................பட்டம் வழங்கப்பட்டது
5. இந்தியாவிலேயே முதன் முதலாக .....................சங்கத்தை ஆரம்பித்தார்.
6. இவரின் அரசியல் குரு...........
7. புதிய உரைநடையின்............. என்று இவர் போற்றப்படுகிறார்.
8. கல்யாணசுந்தரனார் எப்போதும்.................. ஆடை அணிவார்
9. மகாத்மா காந்தியை முதன் முதலில் ...............என்று அழைத்தவர் திரு.வி.க..
10. தமிழ் நாட்டு காந்தி என்று இவரைப் பாராட்டியவர்..............
11. இவர் ....................நூலுக்கு உரை எழுதினார்.
விடைகள்
1. யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை 2.வடமொழி 3.தேசபக்தன் -நவசக்தி 4. புரட்சி வீரர் 5.தொழிற்சங்கம் 6.திலகர் 7.தந்தை 8. கதராடை 9.காந்தியடிகள் 10.கல்கி 11.திருக்குறள்
- த. சங்கர்
