
இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு சில நிமிடங்கள் இருளில் இருந்தாலே நாம் தவித்துப் போகிறோம். எதையுமே பார்க்க முடியாமல், கேட்கவும் முடியாமல் வாழ்கிற மாற்றுத் திறனாளிகளின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறோமா? பார்வை இல்லை. கேட்கும் திறனும் கிடையாது. ஆனால், அதைக் குறையாக எண்ணி, வாழ்க்கையில் சோர்ந்துவிடாமல் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் ஹெலன் ஆடம்ஸ் கெல்லர் (Helen Adams Keller).
ஹெலன் கெல்லரின் வாழ்க்கை மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்ல; மனித இனத்துக்கே உதாரணமானது.
ஹெலன் கெல்லர், அமெரிக்காவின் அலபாமா (Alabama) மாகாணத்தில் உள்ள தஸ்கம்பியா (Tuscumbia) என்ற ஊரில் 1880ல் பிறந்தார். பிறக்கும்போது முழு ஆரோக்கியத்துடன் இருந்தார். இரண்டு வயதாகும்போது ஏற்பட்ட காய்ச்சலால், பார்வையையும், கேட்கும் திறனையும் இழந்தார். பெற்றோர் அதிர்ந்து போனார்கள். தங்கள் செல்ல மகளுக்குக் கல்வி கற்பிப்பது எப்படி?
அந்த நேரத்தில்தான் வாஷிங்டனில் இருந்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (Alexander Graham Bell) என்பவரைச் சந்தித்தனர். ஆமாம், தொலைபேசியைக் கண்டுபிடித்த அதே கிரஹாம்பெல்தான்! அப்போது ஹெலனுக்கு ஏழு வயது. கிரஹாம்பெல், காது கேளாதவர்களுக்கான நலனிலும் கல்வியிலும்கூட ஈடுபாடு கொண்டவர். அவர், 'ஆன் மான்ஸ்ஃபீல்டு சல்லிவன்' (Anne Mansfield Sullivan) என்ற ஆசிரியையை ஹெலன் கெல்லருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
பார்வையற்ற, கேட்கும் திறனையும் இழந்த ஒரு சிறுமிக்கு எப்படி எழுத்துகளையும், சொற்களையும் அறிமுகம் செய்வது? மிகவும் சவாலான விஷயம்தான்! ஆசிரியை ஆன் சல்லிவன், ஹெலன் கெல்லரின் உள்ளங்கையில் விரல்களால் எழுதிக் காண்பித்து எழுத்துகளை, எண்களை அறிமுகம் செய்தார். ஹெலனுக்கு இது ஒரு விளையாட்டுப் போல இருந்தது. மிகவும் பிடித்துவிட்டது. எழுத்துகளுக்குரிய பொருட்களைத் தொட்டுப் பார்த்து உணர்ந்துகொண்டார்.
ஹெலன், பார்வையற்றவர்களுக்கான 'பிரெயில்' (Braille) எழுத்து முறையில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமை ஹெலனுக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயதுக்குள் லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்க மொழிகளை பிரெயில் முறையில் கற்றுக்கொண்டார். விடாமுயற்சியோடு கல்வி கற்ற ஹெலன் கெல்லர், ஆசிரியை ஆன் சல்லிவன் துணையுடன், ராட்கிஃளிப் பல்கலைக்கழகத்தில் (Radcliffe University) பட்டம் பெற்றார்.
கல்லூரி நாட்களில் 'என் வாழ்க்கைக் கதை' (தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப் - The Story of My Life) என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார். அமெரிக்காவின் உயரிய விருதான 'சுதந்திரப் பதக்கம்', 'ஹெலன் கெல்லர் இன் ஹெர் ஸ்டோரி' (Hellen Keller In Her Story) என்ற ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல உயர்ந்த விருதுகளை ஹெலன் கெல்லர் பெற்றிருக்கிறார்.
''வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்! அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது'' என்று சொன்ன ஹெலன், அதற்கு உதாரணமாக, வாழ்ந்து காட்டியவர்.

