'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி
9.9.1899 - 5.12.1954
புத்தமங்கலம், தஞ்சாவூர்.
தமிழ்க் கதாசிரியர்களில் தனக்கென தனிச் சிம்மாசனம் அமைத்து, எல்லோரது இதயங்களிலும் அமர்ந்தவர் கல்கி. சரித்திரம், சமூகம் என இரண்டு துறையிலும் இயங்கிய அவரது நாவல்கள் இன்றைக்கும் பிரபலம். அவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினம் மூன்று தலைமுறைகள் கடந்து இன்றும் வாசிக்கப்படுகிறது. இதற்குக் காரணம், மர்மத்துடன் கூடிய அருமையான கதைப் பின்னல். 'நேயர்கள் சற்றே சிரித்து மகிழ வேண்டும்; கொஞ்சம் புன்னகையேனும் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன்தான் நான் எழுதி வருகிறேன்' என அவரே சொல்லியிருக்கிறார்.
இந்தச் சில காரணங்களை மட்டும் கல்கியின் அடையாளமாகச் சொல்ல முடியாது. முன்னோடிப் பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடலாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் போன்ற பல ஆளுமைகளுக்குச் சொந்தக்காரர்.
இவரது இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கியபோது, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
கல்கி முதலில் திரு.வி.க.வின் நவசக்தி இதழில் துணை ஆசிரியராகவும், பின்னர் ஆனந்த விகடன் இதழிலும் பணியாற்றினார். 1941ல் நண்பர் சதாசிவத்துடன் சேர்ந்து தொடங்கியதே 'கல்கி' பத்திரிகை. அந்தப் பத்திரிகையில் தொடராக பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அலை ஓசை, பொன்னியின் செல்வன் ஆகியவை வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. நாட்டியம், சங்கீதம், சினிமா போன்ற துறைகளைப்பற்றி, 'கர்நாடகம்' என்ற புனைப்பெயரில் கல்கி எழுதிய விமர்சனங்கள் முக்கியமானவை.
63 ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் பெரும்பாலோரால் வாசிக்கப்படுகிறது என்பதுதான் கல்கியின் வெற்றிக்கு நாம் கொடுக்கும் பரிசு.
முக்கியமான படைப்புகள்
கள்வனின் காதலி
தியாகபூமி
அலை ஓசை
பொய்மான் கரடு
பார்த்திபன் கனவு
சிவகாமியின் சபதம்
பொன்னியின் செல்வன்

