PUBLISHED ON : ஆக 07, 2023

* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை, பதிற்றுப்பத்து எட்டாம் பத்தில் பாடியவர் அரிசில் கிழார். அவருக்கு இரும்பொறை, ஒன்பது நூறாயிரம் (ஒன்பது லட்சம்) காணம் பொற்காசுகள் கொடுத்தார். லட்சம் என்பது அக்காலத்தில் நூறாயிரம் என்று வழங்கப்பட்டது. தன் மனைவியோடு வெளியே வந்து நின்றுகொண்டு, அசிரில் கிழாரை மன்னராகப் பொறுப்பேற்குமாறு கூறினார் இரும்பொறை. ஆனால், புலவர் மறுத்து, அமைச்சராக மட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
* சோழ அரசன் கரிகால் வளவன். இவரைப் போற்றி பட்டினப்பாலை என்னும் நூலை எழுதினார் கடியலூர் உருத்திரங் கண்ணனார். இந்நூல் அரகேற்றப்பட்ட இடம், பதினாறு கால் மண்டபம். அவருக்கு பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்பட்டது. பிற்காலத்தில் பாண்டிய அரசன் மாறவர்மன் சுந்தர பாண்டியன், சோழ நாட்டை அழித்தபோதும் இந்த மண்டபத்தை அழிக்காமல் விட்டார்.
* செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் சேர அரசனைப் பற்றிப் பாடியவர் கபிலர். இவருக்கு நூறாயிரம் காணம் பொன்னும் நன்றா என்னும் குன்றின் மீதேறி நின்று புலவர் கண்ணுக்கும் அரசனின் கண்ணுக்கும் தெரிந்த நிலம் எல்லாம் பரிசாக வழங்கப்பட்டது.
* விக்கிரம சோழன் உலா, அவர் மகனாகிய இரண்டாம் குலோத்துங்கனைப் பற்றிய 'குலோத்துங்க சோழன் உலா', அவர் மகனாகிய இரண்டாம் ராசராசன் பற்றி 'ராசராசன் உலா' என்று மூன்று உலா நூல்களை எழுதியவர் ஒட்டக்கூத்தர். இவருக்கு அரிசிலாற்றங் கரையில் ஓர் ஊர் பரிசாகக் கொடுக்கப்பட்டது. அந்த ஊர் கூத்தனூர் என்று அழைக்கப்படுகிறது.
* பரணர் சேரன் செங்குட்டுவனைப் பாடியவர். உம்பற்காடு நாட்டுப் பகுதியில் கிடைக்கும் வருவாய் முழுவதும் பரணருக்கு உரியதாகக் கொடுத்தார் செங்குட்டுவன். தவிரவும், இளவரசனான தன் புதல்வன் 'குட்டுவன் சேரலையும்' புலவருக்குப் பணிவிடை செய்ய அனுப்பினார்.
