PUBLISHED ON : ஜூன் 24, 2019
ஸ்பைசஸ் (SPICES) எனும் நறுமணப் பொருட்களின் (பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு போன்றவை) வரலாறு மிகப் பழமையானது. மனித நாகரிகத்தின் தொடக்க காலத்திலிருந்து நறுமணப் பொருட்கள் மனித இனத்தால் அடையாளம் காணப்பட்டு பயன்பட்டு வருகிறது.
நறுமணப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு புதிய நிலப்பரப்புகள் அடையாளம் காணப்பட்டன; விற்கப்பட்டன. இவற்றைக் கையகப்படுத்த போர்களும் மூண்டன.
நறுமணப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட மதம் சார்ந்த நம்பிக்கைகளும், பழக்கங்களும் ஏற்றம் கண்டன அல்லது வீழ்ந்தன. பண்டைய காலத்திலும், இடைக் காலத்திலும் வியாபாரம் என்றாலே அது நறுமணப் பொருட்கள் சார்ந்ததாகவே அமைந்திருந்தது.
கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தியர்கள் நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். உணவுச்சுவைக்காகவும், அழகுப் பொருட்களுக்காகவும், இறந்த உடல்களைப் பதப்படுத்தவும் நறுமணப் பொருட்களை நாடினர். கிரேக்கர்கள் தொடங்கிய இந்தப் பயன்பாடானது, கிழக்கு மெடிட்டரேனியன், ஐரோப்பா என்று மெல்ல உலகம் முழுக்கப் பரவத் தொடங்கியது.
குறிப்பாக சீனா, இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தரமான நறுமணப் பொருட்கள் விளைந்தன. இவை, தரைமார்க்கமாக கழுதைகள், ஒட்டகங்கள் மூலமாக பிற இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஆண்டுகளில், இந்த நறுமணப் பொருட்கள் வணிக ஆதிக்கமானது, முதலில் அரேபியர்களின் கையில் இருந்தது. பிறகு ஐரோப்பியர்கள், இந்தியா மற்றும் நறுமணப் பொருட்கள் உற்பத்தியாகும் கிழக்கு நாடுகளின் கடல்வழிப் பாதையைக் கண்டறிந்தனர். இதன் விளைவாக, இந்த வணிகம் ஐரோப்பியர்களின் கைகளுக்கு ஏகபோகமாக மாறியது.
- சு.கவிதா

