PUBLISHED ON : பிப் 18, 2019

மாணவ, மாணவியர் பலரும், வீட்டில் கட்டிக் கொடுக்கும் உணவைச் சாப்பிடுவதே இல்லை என்பது அனேக பெற்றோர்களின் புகாராக இருக்கிறது. இதுபற்றி மாணவர்களின் கருத்துகளை அறிய உங்களுக்கு வீட்டில் கட்டிக் கொடுக்கும் உணவு பிடிக்கிறதா? இல்லையா? என்று கேட்டிருந்தோம். மேட்டுப்பாளையம், சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ.மேல்நிலைப் பள்ளி மாணவிகளை நேரில் சந்தித்தோம். அவர்களின் கருத்துகள் இதோ:…
ந. நிக்கிதா (9ஆம் வகுப்பு)
வீட்டு உணவை விட, ஓட்டல் சாப்பாடு வெரைட்டியாகவும் நல்ல வாசனையாகவும் இருக்கிறது. ஆனால் வீட்டில் அம்மா கஷ்டப்பட்டு சமைத்துத் தருவதால், அதையே அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறேன்.
ரா. லத்திகா (9ஆம் வகுப்பு)
வீட்டில் கட்டிக் கொடுக்கும் உணவு சூடாக இல்லை. உணவைச் சமைத்த சிறிது நேரத்தில் சூடாகச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி. இதனால், எனக்கு கடைகளில் சூடாகச் சாப்பிடும் உணவே பிடித்திருக்கிறது.
ச. பவதாரிணி (9ஆம் வகுப்பு)
நான் விரும்பி உண்பது கடை உணவைத்தான். அங்கு வாங்கும் உணவு ருசியாக இருக்கும். சாப்பாடு, சூடாகவும் ருசியாகவும் இருந்தால் தானே எல்லோருக்கும் பிடிக்கும்? அதனால் எனக்கு வெளி உணவுதான் பிடித்திருக்கிறது.
எஸ்.கே. சுஷ்மிதா (9ஆம் வகுப்பு)
வீட்டு உணவுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்றால், வீட்டு உணவுதான் சிறந்தது. அது எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால் எப்போதும் ஆரோக்கியமாக வாழ வீட்டு உணவுதான் சிறந்தது.
பி. ஸ்வேதா (9ஆம் வகுப்பு)
எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, அதையே செய்து கொடுப்பதால் வீட்டில் கட்டிக் கொடுக்கும் உணவே எனக்குப் பிடித்திருக்கிறது. வெளியில் சாப்பிட்டால் வயறு மட்டும்தான் நிரம்பும்; மனசு நிறையாது.
சி.க. தனிஷ்கா (8ஆம் வகுப்பு)
வீட்டில் கட்டிக் கொடுக்கும் உணவுதான் பிடிக்கும். அதைச் சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏதும் வராது. சுத்தமான எண்ணெய், பார்த்து பார்த்து வாங்கிய பொருட்களில் கவனம் எடுத்து, தினமும் சமைத்துத் தரும் அம்மாவின் உணவுதான் எனக்குப் பிடிக்கும்.
