PUBLISHED ON : அக் 13, 2016
முதல் முதலாக, மனிதர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்ட உலோகம் தாமிரம் (copper - காப்பர்). இது செம்பு என்று பொதுவாக வழங்கப்படுகிறது.
தாமிரத்தையும், வெள்ளீயத்தையும் (tin - டின்) சேர்க்கும்போது, வெண்கலம் என்ற கலப்பு உலோகம் கிடைக்கிறது. ஏறத்தாழ 5,300 ஆண்டுகளுக்கு முன், இதன் பயன்பாடு பரவலாகத் தொடங்கியது. இந்த வெண்கலம் தான், சிந்து சமவெளி, கிரேக்க, எகிப்திய நாகரிங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதனாலேயே, அந்த காலகட்டத்தை, வெண்கல காலம் என வரலாற்றாளர்கள் வரையறுத்து உள்ளனர்.
வியக்க வைக்கும் நகரங்களை அமைத்து, கடல் தாண்டி வர்த்தகத்தில் ஈடுபட்டு, கொடிகட்டி பரந்த வெண்கல கால நாகரீகங்கள் திடீரென, ஏறத்தாழ 3,500 ஆண்டுகளுககு முன் சிதையத் தொடங்கின.
காரணம் இரும்பு!
4,000 ஆண்டுகளுக்கு முன், இரும்பை உருக்கும் வித்தை, தற்கால துருக்கி, சிரியா நாட்டு பகுதிகளை சேர்ந்த, ஹிடைட் மக்களால் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில், இவர்கள் உருவாக்கிய இரும்பிற்கு போதிய வலிமை இல்லாததாலும், இரும்பை உருக்க அதிக எரிபொருள் தேவைப்பட்டதாலும், மற்ற நாகரிகங்கள் இரும்பை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், காலப்போக்கில் தொழில்நுட்ப முன்னேற்றங்களால், வெண்கலத்திற்கு இணையான வலிமையோடு இரும்பு உருவாக்கப்பட்டது.
அந்த காலகட்டத்ததில், ஆயுதங்களை செய்ய, வெண்கலம் சிறப்பான உலோகம் என்றாலும், அதை உருவாக்குவதற்கு தேவைப்பட்ட வெள்ளீயம் கிடைப்பது அரிது. அதனாலேயே, பண்டைய நாகரிங்கள் வெள்ளீய வர்த்தகத்திற்கு வசதியாக கடல் சார்ந்தே தங்கள் நகரங்களை அமைத்துக்கொண்டன.
இந்த சூழலில், வெண்கல வலிமையில் தயாரான இரும்பு ஆயுதங்களை வைத்து, பல இனங்களை சேர்ந்த பழங்குடியின மக்களும், நாடோடி மக்களும் இந்த நாகரிகங்கள் மீது படையெடுக்க தொடங்கினர். இதனால், முதலில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனாலேயே, பண்டைய நாகரிகங்கள் அழிந்துவிட்டன.
அந்த அழிவில் இருந்து உருவானவை தான் இரும்பு கால நாகரிகங்கள். இந்தியாவில், சிந்து சம வெளி நாகரிகத்தின் அழிவிற்கு பின், வேதங்களை மையப்படுத்திய நாகரிகம் தோன்றியது. அதனால், அந்த காலகட்டம், வேத காலம் என அடையாளப்படுத்தப்படுகிறது.

