தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உங்கள் நுண்ணறிவு எவ்வளவு?

உங்கள் நுண்ணறிவு எவ்வளவு?

உங்கள் நுண்ணறிவு எவ்வளவு?


PUBLISHED ON : மார் 13, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நுண்ணறிவு (Intelligence) என்பது, குறிப்பிட்ட விஷயத்தை விரைவாக விளங்கிக் கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுதல், நினைவில் வைத்திருத்தல், அவற்றை ஆராய்தல், ஆராய்ந்தவற்றை விளங்கிக் கொள்ளுதல்; இந்த நான்கு அம்சங்களையும் நுண்ணறிவுப் பயிற்சிகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். நுண்ணறிவுக் கேள்வி பதில்களின் வாயிலாக, நம் மன ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்.

நுண்ணறிவு சோதனை

பின்வரும் உரைப் பகுதியை வாசிக்கவும்.

தீவின் தென்மேற்குக் கரையோரப் பகுதியில், மீனவர் வசிக்கும் கிராமம் ஒன்றிற்கு அருகில் இளம் வீரன் ஒருவன் கையில் ஈட்டியுடன் காவல் புரிந்துகொண்டிருந்தான். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அவன் மிக்க விழிப்பாக இருந்தான். கொடிய பிராணிகள் அங்கு நடமாடுவது அவனுக்குத் தெரிந்திருந்தது.

அப்போது “சர சர” என்ற சத்தம் எங்கிருந்தோ கேட்பதை அவன் உணர்ந்தான். சத்தம் அண்மித்து வந்ததும், இரு உருவங்கள் தெரிந்தன. உடனே “நில்; யார் அங்கே-” என்று உரக்கக் கத்தினான். ஆனால், அது தன் படைத் தளபதியும், அவன் நண்பனும் என்பதை அறிந்து, தன்னைச் சுதாரித்துக் கொண்டான்.

“எங்கே மற்ற காவல் வீரர்கள்” என்று கேட்டதற்கு, அவன், அவர்கள் இருந்த இடத்தை நோக்கிக் குழலை ஊதினான். உடனே புதர்களுக்குப் பின்னால் இருந்து பாய்ந்து வந்து வரிசையில் நின்றனர். படைத் தளபதி இதனைப் பாராட்டி, “எந்நேரமும் எதிரிகள் வரக்கூடும்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

சிறிது நேரத்தில் பொழுது புலர்ந்ததும், படை வீரர்கள் எல்லோரும் விழித்து எழுந்து தத்தம் கடமைகளைச் செய்யத் தொடங்கினர். நண்பகல் ஆனபோது, படைத் தளபதி அப்பாசறையில் இருந்து புறப்பட்டுத் தெற்கே மலை அடிவாரத்தில் புதிய பாசறை ஒன்று அமைக்க வேண்டும் என்பதைக் கூறினான்.

இப்போது ஒவ்வொரு வினாவுக்கும் கீழே தரப்பட்டுள்ள விடைகளில் மிகப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1. இந்த உரைப்பகுதி கூறும் கதை எதைப் பற்றியது?

அ. மீனவர்களை

ஆ. ஒரு பயணத்தை

இ. யுத்தத்தை

ஈ. காவல் படையினரை

2. படைத்தளபதி இளைஞனைப் பாராட்டியது ஏன்?

அ. அவனது துணிச்சலுக்காக

ஆ. தூங்காமல் இருந்ததற்காக

இ. விழிப்பாகக் காவல் புரிந்ததற்காக

ஈ. “நில்; யார் அங்கே” எனக் கத்தியதற்காக

3. அவன் விழிப்புடன் இருந்ததற்குக் காரணம் என்ன?

அ. கடும் குளிராக இருந்தமையால்

ஆ. நித்திரை செய்தால் படைத்தளபதி தண்டிக்கக்கூடும் என்பதால்

இ. எதிரிகள் வரக்கூடும் என்பதால்

ஈ. கொடிய பிராணிகள் வரக்கூடும் என்பதால்

4. “சர சர” என்ற சத்தம் ஏன் கேட்டது?

அ. தளபதியும் அவன் நண்பனும் வந்ததால்

ஆ. கொடிய பிராணிகள் நடமாடியதால்

இ. காற்று வீசியதால்

ஈ. இலைகள் ஆடியதால்

5. அவன் மிகவும் விழிப்புடன் காவல் புரிந்தான் என்பதை, பின்வரும் எந்தச் செயலில் இருந்து அறியலாம்?

அ. குழலை ஊதியதில் இருந்து

ஆ. “சர சர” என்ற சத்தம் கேட்டதை உணர்ந்து கொண்டதில்இருந்து

இ. “நில்; யார் அங்கே?” என்று கத்தியதில் இருந்து

ஈ. கையில் ஈட்டியுடன் நின்றதில் இருந்து

6. படைத்தளபதி காவல் வீரனைச் சந்தித்த நேரம்

அ. மாலை

ஆ. நண்பகல்

இ. அதிகாலை

ஈ. நள்ளிரவு

7. அவன் காவல் புரிந்தது

அ. படைவீரர் தங்கும் இடத்தை

ஆ. கிராமத்தை

இ. எதிரிகளை

ஈ. மீனவர்களை

8. பாசறை என்பது

அ. மீனவரின் குடிசை

ஆ. மலைப்பாங்கான பகுதி

இ. எதிரிகள் வரும் இடம்

ஈ. படைவீரர்கள் தற்காலிகமாகத் தங்கும் இடம்

9. படைவீரர்கள் தங்கிய இடம்

அ. பாறைகளைக் கொண்ட மலைச் சாரல்

ஆ. காடுகளைக்கொண்ட தீவின் தென் மேற்குப்பகுதி

இ. மணற்பாங்கான கடற்கரைப் பகுதி

ஈ. கரையோரத்தை அடுத்த காட்டுப் பகுதி

10. 'அண்மித்து வந்தது' என்பது

அ. முன்னுக்கு வந்தது

ஆ. அருகில் வந்தது

இ. பின்புறமாக வந்தது

ஈ. விரைவில் வந்தது

விடையளித்து விட்டீர்களா? விடைகளைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

* 10 வினாக்களுக்கும் சரியான விடைகள் அளித்திருந்தால் பாராட்டுகள். உங்கள் நுண்ணறிவுத் திறன் மிகக்கூர்மையாக உள்ளது.

* 5 வினாக்களுக்கு மேல் சரியான விடைகளை அளித்திருந்தால், உங்கள் நுண்ணறிவுத் திறன் இன்னும் மேம்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை நீங்கள் செய்யலாம்.

* 5 வினாக்களுக்கும் குறைவாக சரியான விடைகளை அளித்திருந்தால் உங்கள் நுண்ணறிவுத் திறனை நீங்கள் பயிற்சிகளின் மூலம் மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

விடைகள்: 1. ஈ, 2. இ, 3. இ, 4. அ, 5. ஆ, 6. ஈ, 7. ஆ, 8. ஈ, 9. ஆ, 10. ஆ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us