தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பாடங்களை எப்படிப் படிக்க வேண்டும்?

பாடங்களை எப்படிப் படிக்க வேண்டும்?

பாடங்களை எப்படிப் படிக்க வேண்டும்?


PUBLISHED ON : மார் 27, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேர்வு சமயத்தில் படிப்பது நல்லதா அல்லது தினமும் படிப்பது நல்லதா என்ற கேள்வியை முன்வைத்து, சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் பேசத் தொடங்கினோம்.

“தினமும் படிக்கிறதுதான் நல்லது. கொஞ்சம் கொஞ்சமா பாடங்களை படிச்சுக்கிட்டே வந்தால், எக்ஸாம் சமயத்துல பாடப் புத்தகங்களை திருப்பிப் பார்த்தா போதும். எல்லா பாடமும் நினைவுக்கு வந்துவிடும். தேர்வு சமயத்தில்தான் படிப்பேன்னு சொல்லுறவங்களால, நல்ல மதிப்பெண் பெறமுடியாது” என விவாதத்தை தொடங்கிவைத்தார் சஞ்சய்.

''அப்படி எல்லாம் பொதுவாகச் சொல்லமுடியாது. நானெல்லாம் தினமும் வகுப்புல நடத்துற பாடத்தை கவனமா புரிஞ்சுக்கறேன். அதோட சரி. அப்புறம் எக்ஸாமுக்கு முன்னாடி தான் பாடப் புத்தகத்தையே தொடுவேன். ஆனாலும், நான் தான் வகுப்புல முதல்மார்க் வாங்கறேன். தினமும் படிக்கறது எனக்கு சலிப்பா இருக்குது. அதனால, தேர்வுக்கு முன்னாடி படிச்சாலே போதும்.” என்று தனது மறுப்பை முன் வைத்தார் குணா.

''என்னது சலிப்பு ஏற்படுதா? தினமும் ஒரே பாடத்தையா படிக்கிறோம். எத்தனை பாடம் இருக்கு? தினம் ஒண்ணு படிச்சா, ஏன் சலிப்பு வரப்போகுது?” என்று கேட்டார் ஹரீஷ்.

“இல்லையில்லை; அவன் சொல்லவந்தது என்னன்னா... தினமும் ஸ்கூலில் படிக்கிறோம். அப்பவே பாடங்களை கவனமாக உள்வாங்கிவிட்டால், வீட்டில் போய் படிக்கணும்ங்கிற அவசியம் இல்லை. ஸ்கூலிலேயே படிச்சுட்டா, திரும்பவும் வீட்டுல போய் அதே பாடங்களைப் படிக்கும்போது சலிப்பு வரும்ல... அதைத்தான் இவன் சொல்றான்” என்று குணாவின் பேச்சை ஆமோதித்தார் பொன்ராஜ். உடனே, ஆமாம் என்பது போல தலையசைத்தார் குணா.

''பத்தாவது மாதிரியான பொதுத்தேர்வுக்கு, தினமும் கொஞ்சம் நேரம் படிச்சுக்கிட்டு வந்தாத்தான்.. அதிக மதிப்பெண்ணோட தேர்ச்சி பெற முடியும். அதிக மதிப்பெண் வேண்டாம்னு நினைக்கறவங்க உங்களமாதிரி இருந்துக்கலாம். கடைசி நேரத்துல படிக்கிறது எல்லாம், தேவையில்லாத தொல்லை” என்றார் செல்வக்குமார்.

''அதிலென்ன தொல்லை வந்துடப்போகுது. எப்பப்படிச்சா என்ன..? கடைசியில தேர்ச்சி பெறணும். நாங்க அப்படியே படிச்சு பாஸாகிடப்போறோம்” என்றார் பிரவீன்.

“கடைசி சமயத்துல படிக்கும்போது, வீட்டுக்கு யாரேனும் சொந்தக்காரங்க வந்துட்டாங்கன்னு வையுங்க. உங்களால அப்ப படிக்க முடியுமா?” என்று மடக்கினார் ஹரீஷ்.

“இதுவரை, அப்படி யாருமே வந்ததில்லையே” என்று கோரஸாகச் சொன்னார்கள் எதிர் அணியினர்.

“இதுவரை வராமல் இருக்கலாம். இனிமேல் அப்படி நடந்துட்டா என்ன செய்வீங்க. அப்போ படிக்கவும் முடியாது. அவங்களோட நேரம் செலவிடவும் முடியாது. கடைசி நேர டென்ஷன்தான் நமக்கு மிஞ்சும். தேவையா இதெல்லாம்...?” என்று கூறினார் ஹரீஷ்.

“பாடம் பாடம்ணு இருக்கிறதுதான் டென்ஷன். ஸ்கூல் பாடத்தை ஸ்கூல்லயே முடிச்சுடணும். ஏதாவது டவுட் இருந்தா, அப்பவே கேட்டுடணும். ஸ்கூல் விட்டு வீட்டுக்குப்போனதும், கொஞ்ச நேரம் 'டிவி'; அப்புறம் விளையாட்டுன்னு இருந்துட்டா, டென்ஷனே இல்லை. பரீட்சை தேதி சொன்னதும், எல்லாத்தையும் மூட்டைகட்டி வச்சுட்டு, படிக்க ஆரம்பிச்சுடலாம்.” என்றார் குணா.

''நாங்களும் அன்னன்னைக்கு பாடத்தை, அப்பவே படிக்கணும்னுதான் சொல்றோம். வீட்டுக்குப் போனதும், கொஞ்ச நேரம் பள்ளியில நடத்தப்பட்ட எல்லா பாடத்தையும், ஒரு ரிவிஷன் மாதிரி, புரட்டிப்பார்த்துடலாம். ஏதாவது சந்தேகம் இருந்தால், மறுநாளே கேட்டு தெளிவு அடையலாம். அதைவிட்டுட்டு, தேர்வுக்கு முன்னாடி பழையபாடத்துல டவுட் கேட்க முடியுமா?” இது சஞ்சயின் கேள்வி.

''தினமும் டியூஷன், ஹோம்வெர்க்கிற்கே நேரம் பத்தவில்லை; இதில் எங்கிருந்து பாடங்களை, தினம் தினம் படிக்கிறது” என்று சொல்லிவிட்டு, நாக்கை கடித்துக்கொண்டார் குணா.

''ஹா.ஹா..ஹா.. இதைத்தான் தினமும் படிக்கிறதுன்னு நாங்க சொல்றோம். இருபத்தி நாலுமணி நேரமும் படிக்கணும்னு நாங்க சொல்லவில்லை. விளையாடுங்க, 'டிவி' பாருங்க. ஆனா படிக்கவும் திட்டமிட்டு நேரம் ஒதுக்குங்கன்னு தான் சொல்றோம். நீங்க டியூஷனும் போறீங்க, ஹோம்வெர்க்கும் செய்றீங்க.. வேறென்ன வேணும்? இதுவும் தினம் தினம் படிக்கிறது மாதிரித்தான். நீங்க எங்க அணிப் பக்கம் வந்துடுங்க” என்று செல்வக்குமார், ஹரீஷ், சஞ்சய் ஆகியோர் கோரஸாக சொன்னார்கள். இவர்களும் தங்களது சிரிப்பின் மூலம், எதிரணியினரின் கருத்தை ஆதரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us