PUBLISHED ON : ஜூன் 26, 2017

புத்தகச் சுமையை எவ்வாறு குறைக்கலாம்? என்று சென்னை சேலையூர், சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களோடு உரையாடினோம். புத்தகச் சுமை எவ்வாறு தங்களைப் பாதிக்கிறது, அதற்கு மாற்று வழிகள் என்ன என்பது குறித்து, மாணவர்கள் தங்கள் கருத்துகளை மளமளவெனக் கொட்டத் தொடங்கினார்கள்.
மா.இந்துமதி
ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு, மூணு பாடப் புத்தகங்கள் இருக்கறதாலயும், நிறைய நோட்டுப் புத்தகங்கள் இருக்கறதாலயும் புத்தகச் சுமை ரொம்ப அதிகமா ஆகிடுது. பாடப் புத்தகங்களை எதுக்கு இவ்வளவு பெரிசா எழுதணும்? சுருக்கமா, அடிப்படை விஷயங்களை மட்டும் சொன்னா போதாதா? எப்படி இருந்தாலும் கிளாஸ் டீச்சர் அதை விரிவுபடுத்திச் சொல்லிக் கொடுப்பாங்களே?
கே.ஆதித்யா
நிஜம்தான். அதே சமயத்துல, டைம் டேபிள் படி புத்தகம் கொண்டு வந்தாலே பாதிச் சுமை குறையும். ஆனால், என்ன பிரச்னைன்னா, ஒரு நாள் ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்ட் டீச்சர் வரமாட்டாங்க. வேற டீச்சர் வகுப்பு எடுப்பாங்க. அவங்களோட பாடப் புத்தகங்கள் அப்போ தேவையா இருக்கும். புக்ஸ் இல்லாட்டி மிஸ் கோச்சுக்குவாங்க. இந்தப் பிரச்னை இல்லாமல், டைம் டேபிள்படி வகுப்பு இருந்தாலே போதும்.
லோ.ஷர்மிளா
பாடங்களை வொர்க்ஷீட்களாக மாத்திக் கொடுத்தா எப்படி இருக்கும்? ஒவ்வொரு சப்ஜெக்ட்லேயும் ஒவ்வொரு பாடத்தையும் வொர்க் ஷீட்டாக மாத்திக் கொடுத்தா இன்னும் நல்லது. வகுப்புலேயே அதைப் படிச்சுட்டு, அதிலேயே கேள்வி, பதில் எழுதி, அப்படியே ஃபைல் பண்ணி வெச்சுக்கலாம். தேர்வு வரும்போது, அந்த ஷீட்களை எடுத்துப் படிச்சாலே போதுமே!
மு.சீ.ராகுல்
இவ்வளவு சப்ஜெட்டுகள் இருக்கிறதாலேதானே இவ்வளவு புத்தகங்கள் தேவையா இருக்கு? உண்மையிலேயே இத்தனை சப்ஜெக்டுகள், இத்தனை பாடங்கள் வேணுமான்னு கல்வியாளர்கள் யோசிக்கலாமே? சின்ன வயசுலேருந்தே அத்தனை மூட்டையையும் சுமக்கறதுக்குப் பதில், படிப்படியாக ஒவ்வொரு வகுப்புலேயும் ஒவ்வொரு சப்ஜெக்டை அறிமுகப்படுத்தலாமே. புத்தக எடையும் குறைவா இருக்குமே!
சீ.ரசிகா
புத்தகச் சுமையோட சப்பாட்டுச் சுமை, தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ் பாக்ஸ்னு கூடவே நிறைய தூக்கிக்கிட்டுப் போகவேண்டியிருக்கு. அதனாலும் பள்ளிக்கூடப் பை ரொம்ப சுமையா ஆகிடுது. சாப்பாடு, நல்ல குடிநீர், ஸ்நாக்ஸ் எல்லாம் ஸ்கூல்லேயே கொடுக்கலாமே!
மூ.தீபக்செல்வம்
அதுக்கும் சேர்த்து ஃபீஸ் கேப்பாங்க! அப்பறம் ஹாஸ்டல் சாப்பாடு மாதிரி ஆகிடும், சாப்பிடவே பிடிக்காமல் போனாலும் போயிடும். முதுகுல புத்தகங்களைத் தூக்கினாத்தானே பிரச்னை. அதையே டிராலி மாதிரி தள்ளிக்கிட்டு போனா நல்லாத்தானே இருக்கும். யாராவது வித்தியாசமான ஸ்கூல் டிரால் பேக் உருவாக்கிக் கொடுத்தாங்கன்னா, அதை ஈஸியா தள்ளிக்கிட்டே போகலாமே!
மா.இந்துமதி
செம ஐடியா தீபக்! அதைவிட, பல பள்ளிகளில் இப்போது நவீன கல்விப் பயிற்சி முறைகளை அறிமுகம் செய்துக்கிட்டு வராங்க. அதன்படி, 'ஸ்மார்ட் கிளாஸ்' (Smart Class) கற்பித்தல் நடக்குது. இதன் மூலம் பள்ளிக்கு எடுத்துக்கிட்டு வரவேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைஞ்சுடுமே!
கே.ஆதித்யா
இன்னொரு ஐடியாவும் முயற்சி செஞ்சு பார்க்கலாம். பாடத்திட்டத்தை சின்னச் சின்ன பகுதிகளாகப் பிரிச்சு, குறிப்பிட்ட தேர்வுக் காலத்துக்கு மட்டும் உள்ள சின்ன புத்தகங்களை வெளியிடலாம். ஒரே சப்ஜெட்டுக்கு ஒரு வருஷத்துல அஞ்சு பாடப்புத்தகங்கள் இருந்தா என்ன தவறு? இந்த முறைப்படி அதிகமான நோட்டுப் புத்தகங்கள், புத்தகங்களை கொண்டு வரவேண்டிய தேவையே இருக்காதே!
லோ.ஷர்மிளா
பள்ளிகளில் தனித்தனியா புத்தகங்கள் வைக்கிற அலமாரிகள் கொடுத்தா இன்னும் நல்லாயிருக்கும். படிக்க வேண்டிய, எழுத வேண்டிய புத்தகங்களை மட்டும் வீட்டுக்குக் கொண்டு போய் கொண்டு வரலாம்.
மு.சீ.ராகுல்
புத்தக அலமாரி ஏற்பாடு எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் சாத்தியமில்லை. ஆனா, இன்னொரு ஐடியா செய்யலாம். ஒவ்வொரு ஸ்கூல் வாசல்லேயும் ஒரு கன்வேயர் பெல்ட் வெச்சுடலாம். அதுல பைய வெச்சுட்டா, நேரா நம்ம கிளாஸுக்கே அது போய் சேர்ந்துடும்... எப்படி என் ஐடியா?
சீ.ரசிகா
கலக்கற போ! எங்க பள்ளியில 'எஜுகாம்' (Educom) முறை இருக்கு. இதுல நாங்க புத்தகமாக படிக்கறதைவிட செய்முறையா பாடங்களைக் கத்துக்கறோம்.
மூ. தீபக்செல்வம்
ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கறதுல 70 சதவீதம் மனசுல பதியும். வீட்டுக்குப் போய் புத்தகங்களை மறுபடி படிக்கறதால 30 சதவீதம் பதிவாகுது. இதில் தேவையான புத்தகங்களை மட்டும் பள்ளிக்கு கொண்டு வந்தா போதும்னு பள்ளிகள் சொன்னாலே பாதி சுமை குறைஞ்சுடும். பெற்றோரும் எல்லாத்தையும் தூக்கிக்கிட்டுப் போன்னு சொல்லாமல் இருக்கணும். அதுதான் முக்கியம்!
