PUBLISHED ON : டிச 02, 2019

ஊக்கம்
இரண்டாம் பருவத் தேர்வுகள் நெருங்குகின்றன. பல பாடங்களில், நான் எழுதி முடிக்கவேண்டிய பகுதிகள் மிச்சம் இருந்தன. சில நாட்கள் பள்ளிக்கு வரமுடியாமல் போய்விட்டது. பெரியப்பா பெண் திருமணம். நிறைய பாடங்களை நடத்திமுடித்துவிட்டார்கள். கேள்வி, பதில்கள் எழுதிப் போட்டுவிட்டார்கள். அவற்றையெல்லாம் எழுதி மாளவில்லை. அதைவிட, அவற்றை எழுதுவதற்கான வேகமே வரவில்லை. இரண்டு, மூன்று முறை வகுப்பு ஆசிரியர் கடிந்து கொண்டுவிட்டார்.
அவர் நோட்டுப் புத்தகத்தை ஆராய்ந்து பார்த்து, கோபப்பட்டார். உமா மிஸ்ஸிடம் சொல்லி, என் வீட்டிலும் தெரிவிக்கச் செய்துவிட்டார். ஏன் இந்த விதமான தாமதம், சோர்வு என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மதிய உணவின்போது, உமா மிஸ் கூப்பிட்டு அனுப்பினார். ஆசிரியர்கள் அறைக்குப் போய் அவரைப் பார்த்தேன்.
“என்னாச்சு கதிர்? ஏன் நோட்ஸ் எல்லாம் எழுதி கம்ப்ளீட் பண்ணலை?”
நான் தயங்கி நின்றேன். காரணம் தெரியவில்லை. வேகம் வரவில்லை. என் மெளனம் உமா மிஸ்ஸுக்கு என்ன அர்த்தம் தந்ததோ?
“சின்னச் சின்னதா தடைகள் வரத்தான் செய்யும். கல்யாணம், நோய்னு நிறைய பிரச்னைகள் இருக்கும். ஆனால், படிப்பு முக்கியமில்லையா? நீதானே இதையெல்லாம் இழுத்துப் பிடிச்சு ஓடணும்?”
“ஆமாம் மிஸ்?” ரொம்ப வருத்தமாக இருந்தது.
“ஊக்கம் முக்கியம் கதிர். லொரினா பத்தி கேள்விப்பட்டிருக்கியா?”
“தெரியலையே மிஸ்.”
“மெக்சிகோ நாட்டுல, ரெளமாரின்னு ஒரு பழங்குடி இடம் இருக்கு. அதுல இருந்து வந்த 24 வயசுப் பொண்ணுதான் லொரினா. இன்னிக்கு உலகமே இந்தப் பெண்ணைப் பார்த்து ஆச்சரியப்படுது?”
“ஏன் மிஸ்?”
“அவரோட ஊக்கமும் முயற்சியும் அப்படிப்பட்டது. மாரத்தான் ஓடறதுக்கே உடல்வலு நிறைய வேணும். ஆனால், அல்ட்ரா மாரத்தான்னு ஓர் ஓட்டம் இருக்கு. அது வழக்கமான மாரத்தான் ஓட்டத்தைவிட தூரம் அதிகமானது. லொரினா,
100 கி.மீ. ஓடற அல்ட்ரா மாரத்தான் ஓடி, தொடர்ச்சியாக முன்னணியில் இருக்கார். அதுவும் எப்படி? ரெளமாரி பழங்குடிகள் போடற ஆடையோட ஓடறாங்க. கால்ல மெத்துன்னு இருக்கிற காலணி கிடையாது. டயர் செருப்புதான்.
அதைவிட முக்கியம், லொரினா ஓடறது கடினமான மலைப்பாதைகள்ல. சாதாரண சாலைகளில் இல்ல. மலை, மேடு பள்ளம், மழை, சேறு, சகதி... எந்த ஒரு விஷயமும் தடையில்லை. ஓட ஆரம்பிச்சா, கடைசி வரை ஓடித்தான் நிற்பார் லொரினா.
இப்படிப்பட்ட ஒரு பெண்ணை யாருமே பார்க்கலை. சாதாரண மாரத்தானுக்கே உடம்பு சோர்ந்து போயிடும். ஆனால், லொரினா ஓடிக் களைப்பதே இல்லை. ஓடி முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து ஆடு மேய்க்கிறார். சமைக்கிறார். மளிகைக் கடைக்கு நடந்தே போய் பொருட்கள் வாங்கி வருகிறார்.
இவருடைய சாதனையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, உசத்தியான ஷூ வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், “அதைப் போட்டுக்கொண்டு ஓடுகிறவர்கள் அனைவரும் என் பின்னால் தான் வருகிறார்கள். அதனால் அது எனக்கு வேண்டாம்”னு திருப்பிக் கொடுத்திருக்கிறார் லொரினா.
ரெளமாரி இனக்குழுவிலேயே ஓடற பழக்கம் இருக்கு. அவங்ககிட்ட வாழ்க்கை வசதிகள் பெரிசா இல்ல. ஆனாலும், இந்தப் பொண்ணு, எதைப் பத்தியும் கவலைப்படாமல், ஓடிக்கொண்டே இருக்கார்.
இவருடைய ஊக்கம்தான் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துது. நம்முடைய உடல் எத்தகைய வலிகளையும் வேதனைகளையும் தாங்கும். அதை நாம் பயன்படுத்திப் பார்த்ததே இல்லை. எட்டு மணிநேரம் தூங்கணும், நேரத்துக்குச் சாப்பிடணும்னு எல்லாம் சொல்றது சரிதான். ஆனால், தேவைப்படும்போது, நமது உடல் எல்லாவிதமான முயற்சிகளுக்கும் ஈடுகொடுக்கும். அதனோட வலிமையை நாம் முழுசா பயன்படுத்துவதே இல்லை. இதுக்குக் காரணம், நம்ம மனசுக்குள்ள, உடலைப் பத்தி உள்ள கற்பிதங்கள், பயங்கள் ஆகியவைதான்.
ஆனால், லொரினா மாதிரியான பெண்கள், இதை எதையும் கவனிக்கிறதில்லை. மன ஊக்கம், உடலை மேன்மேலும் வலிமையாக்கிக்கிட்டே இருக்கு. உன்னால நினைச்சா, அத்தனை வீட்டுப் பாடங்களையும் ஒரே ராத்திரியில உட்கார்ந்து எழுத முடியும். ஆனால், மனசு நினைக்க மாட்டேங்குது. ஊக்கம் இல்லை. நீ உன்னையே மாத்திக்கணும். என்னால எதுவும் முடியும்ன்னு நினைக்கணும். நான் செய்யலைன்னா, யார் செய்யப் போறாங்கன்னு யோசிக்கணும். தள்ளிப்போடக் காரணம் தேடக்கூடாது. தயங்கக்கூடாது. துவளக்கூடாது. லொரினா மாதிரியான சாதனையாளர்கள், இந்த மாதிரியான விஷயங்களில்தான் முன்னோடியாக இருக்காங்க. புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கோ கதிர்.”
ஆசிரியர்கள் அறையைவிட்டு வெளியே வந்தபோது, உற்சாகமாக இருந்தது. உடனே விட்டுப்போன பாடங்களை எழுதி முடித்துவிட வேண்டும் என்று மனசில் ஒரு முடிச்சுப் போட்டுக்கொண்டேன்.
