PUBLISHED ON : ஆக 19, 2019

வானம்பாடிப் பறவை, பாடும் என்று அறிந்திருக்கிறோம். அது பாடினால், மழை வரும் என்ற செய்தி நிறைய பேர் அறியாதது. ஆனால், பழந்தமிழ்ப் பாடல்கள் பல, அது பற்றி பேசுகின்றன.
'வானம் பாடி வறங்களைந் தானா
தளிதுளி தலைஇய புறவிற் காண்வர
வானர மகளோ நீயே'
என்பது, ஐங்குறுநூறு பாடல் (418) வரிகள்.
'மழை வறண்ட காலத்தில், வானம்பாடி பறவை, மேகத்து நீர்த்துளியை நினைத்துப் பாடும். மழையும் பெய்யும். அதனால் அனைத்து உயிர்களின் துன்பமும் நீங்கும்' என்பதே இதன் பொருள்.
'வறங்களை' என்பது வறட்சியைக் குறிக்கும். தளித்துளி 'நீர்த்துளி'.
'துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின்
அடிநிழல் பழகிய வடியுறை'
என்பது புறநானூற்று வரிகள் (198)
'மழைத் துளியை விரும்பி உண்ணும் வானம்பாடி பறவையைப் போல், உன் கொடைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் உன் கால் நிழலில் வாழ வேண்டும்' என்பதே இதன் கருத்து. (துளிநசை - மழைத்துளியை விரும்பும்: புள் - பறவை) 'துளி நசை வேட்கையான் மிசைபாடும் புள்ளிற்றன்' என்பது கலித்தொகை வரி.
'மழைக்காகவே வானத்தின் உச்சிக்குச் சென்று பாடும் இயல்புடையது, வானம்பாடிப் பறவை' என்பது இதன் கருத்து.
வானம் மழை பொழியும் வண்ணம், வானம்பாடிப் பறவை மிக உயரத்தில் பறந்து பாடித் தேம்பி நிற்கும். அதன் காரணமாக மழை பெய்யும் என்பதை, 'தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல்மாறி, வான் பொய்ப்பினும்' என்கிறது, பட்டினப்பாலை வரிகள். இது போலவே, இன்னும் பல பாடல்கள், வானம்பாடி பாடினால், மழை பெய்யும் என்பதைக் கூறுகின்றன. பார்க்கச் சிட்டுக்குருவி போலவே இருக்கும் பறவை தான் வானம்பாடி.

