PUBLISHED ON : டிச 02, 2019

ஜாய்ஸ் பூல் Joyce Poole
நாடு:ஜெர்மன்
துறை: விலங்குகள் பற்றிய ஆராய்ச்சி
ஜெர்மனியில் குடியேறிய அமெரிக்கர்களுக்குப் பிறந்தவர், ஜாய்ஸ். தன்னுடைய 11 வயதில் ஜெர்மன் நாட்டில் இருந்து ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவிற்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்தார். அப்போது முதல் ஜாய்ஸுக்கு விலங்குகள், அவற்றின் நடத்தைகள், பழக்கவழக்கங்கள் பற்றிய தேடலும், ஆர்வமும் அதிகமாயின.
ஜேன் குட்டால், (Jane Goodall) சிம்பன்சியைப் பற்றிய ஆய்வுகள்பற்றி பள்ளிகள், கல்லூரிகளில் கருத்தரங்குகள் நடத்தினார். அவருடைய ஆய்வுகள் பற்றிய பேச்சால், ஜாய்ஸ் ஈர்க்கப்பட்டார். அதனால், உயிரியல் படிக்க வேண்டும் என விரும்பினார்.
ஜேன் குட்டால்போல், தானும் புதிய ஆராய்ச்சி செய்து, துறையில் சாதிக்க ஆசைப்பட்டார். லண்டனில் உள்ள, கேம்ஃபிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விலங்கு நடத்தையியல் பிரிவில் ஆய்வை முடித்து, ஆப்பிரிக்கா திரும்பினார்.
ஜாய்ஸ் ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட விலங்கு யானை. ஆண் யானைகளின் வாழ்வில், மஸ்த் (Musth) எனப்படும் மதநிலையின் பங்கு பற்றி ஆராய்ந்தார். ஆண் யானைகளின் நடத்தைகள், பழக்கவழக்கங்கள், அவைகளுக்குள் நடக்கும் போட்டிகள், இனப்பெருக்கம் பற்றி ஆராய்ந்தார்.
பல ஆண்டுகள் காட்டில் வசித்து, யானைகளைப் பின்தொடர்ந்து, அவை எழுப்பும் ஓசைகள், எந்த நேரத்தில் எழுப்புகின்றன என்பன போன்ற பல விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்தார். யானைகளின் நடத்தைகள், ஓசைகள், வாழ்க்கை முறை என, பல ஆண்டுகளாக யானைகளுக்காகவே முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்து வருகிறார். அதேபோல், யானைகள் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
