PUBLISHED ON : செப் 26, 2016

எந்த நாடு நம்மை அடிமைப்படுத்தியதோ அந்த நாட்டில் பிறந்த ஒரு பெண் நம் நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுத்தார், போராடினார், சிறை சென்றார் என்பது ஆச்சர்யம்தானே!
அந்த ஆச்சர்யமிக்கப் பெண்மணி அன்னிபெசன்ட் அம்மையார். முழு பெயர் அன்னி உட் பெசன்ட்.
இங்கிலாந்தில் பிறந்த இவர், பிராங்க் பெசன்ட் என்ற மதபோதகரை மணந்தார். காலப்போக்கில் கணவரின் மதப் பற்றுக் கொள்கைகள் பிடிக்காமல் அவரை விட்டு பிரிந்தார். பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இங்கிலாந்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணி செய்யும் பெண்களின் ஊதிய உயர்வு. இருப்பிட வசதி இரண்டையும் போராடி பெற்றுத் தந்தார்.
பெசன்ட் அம்மையார் 1893ல் இந்தியா வந்தார். அவரது போராட்ட குணம் இங்கேயும் தொடர்ந்தது. நாட்டு விடுதலைக்கான களமாகத் திகழ்ந்த காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்தியாவிற்கு விடுதலை கோரும் ஹோம் ரூல் இயக்கத்தை ஆரம்பித்தார். இதனால் அவருடைய பொதுக்கூட்டங்களுக்கு ஆங்கில அரசு தடை விதித்தது. தடைகளை மீறி சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவராகவும் ஆனார். பிரம்மஞான சங்கத்தை ஏற்படுத்தியவரும் இவரே.
'காமன் வீல்' 'நியூ இந்தியா' பத்திரிகைகளை ஆரம்பித்து, தனது கருத்துக்களை மக்களிடம் பரப்பினார். பெண் கல்விக்காக குரல் கொடுத்தார். பெண்களுக்கென்று பள்ளி, கல்லூரிகளையும் ஆரம்பித்தார். பெண் குழந்தைகளின் பால்ய திருமணத்தை எதிர்த்தார். விதவைப் பெண்கள் மறுமணம் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
இப்படி தன் வாழ்நாள் முழுக்க சமூக சீர்திருத்தம், இந்திய விடுதலை, மகளிர் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட பெசன்ட் அம்மையாரின் பிறந்த தினம் (1847) அக்டோபர் 1. அவர் செப்டம்பர் 20, 1933ல் காலமானார்.
