PUBLISHED ON : ஜூன் 18, 2018

மருத்துவச் செலவுகள் காரணமாக, கடந்த ஓராண்டில் மட்டும் ஏறக்குறைய 5.5 கோடி இந்தியர்கள் ஏழைகள் ஆகி உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:
மருத்துவத்துக்கு என்று இந்தியர்கள் அவர்களாகவே அதிகத் தொகை செலவிட வேண்டியுள்ளது. குறிப்பாக அதிக அளவு செலவுபிடிக்கும் புற்றுநோய், இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கான சிகிச்சை செலவுகளால், ஓராண்டில் மட்டும் 5.5 கோடி இந்தியர்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 3.8 கோடிப் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர். மேலும், சாலை விபத்துக் காயங்களால் மருத்துவமனைகளில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெறும்போது, மருத்துவச் செலவுடன், சம்பள இழப்பும் ஏற்படுவதால், பெரும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
மக்களின் மருத்துவச் செலவைக் குறைக்க, மத்திய, மாநில அரசுகள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றன. எனினும், மருந்து, மாத்திரை வாங்குவதற்கான செலவுகள் அதிகமாக உள்ளன. அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்துகளைப் பெறும் வாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசு ஏற்படுத்தியுள்ள மலிவு விலை மருந்துக் கடைகளில், போதிய அளவு மருந்து இருப்பு இருப்பதில்லை. இதுபோன்ற காரணங்களால், மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். அவசியமான மருந்துகளின் விலையை அரசு குறைத்துள்ளது. எனினும், மருந்துகளைப் பரிந்துரைப்பது மருத்துவமனை என்பதால், மருந்துச் செலவின் சுமையைக் குறைப்பது சவாலாக உள்ளது. இந்த ஆய்வறிக்கை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகியுள்ளது.
