PUBLISHED ON : செப் 30, 2019
கவனம்: தூய்மையான அரசியல்
அரசியலில் ஈடுபடுவது மக்களுக்குச் செய்யும் சேவை. அது தொழில் அல்ல என்ற தெளிவு காந்திக்கு இருந்தது. இன்று, அரசியலில் சாதாரணர்களால் எந்தப் பங்களிப்பையும் செய்ய முடியாத நிலை. காரணம், அரசியல் என்பதே சாக்கடை என்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது.
இதில், தூய்மை அரசியல் என்பது வெறுங்கனவோ என்ற எண்ணம் எழுந்துவிட்டது.
“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, கிராம முன்னேற்றமே நாட்டின் உண்மையான விடுதலை” என்றார் காந்தி. ''நம் பயணம் என்பது வெறும் அரசியல் விடுதலைதான். அரசியல் என்பது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக இல்லாமல், கொண்டு செல்வதற்குக் கிடைக்கின்ற வாய்ப்பாக இருக்க வேண்டும்” என்று அரசியல் பற்றிய தனது தெளிவான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவரது கருத்துப்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊரும் தனக்குத்தானே அரசியல் உரிமை பெற்றதாக இருக்க வேண்டும்.
இன்று ஒவ்வொரு பொதுத் தேர்தல்களின் போதும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து செய்திகள் வருகின்றன. ஆனால், அந்தக் குற்றத்திற்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்று அரசியல் நேர்மைபற்றி நமக்குப் பாடம் போதித்திருக்கிறார் காந்தி.
தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும், தனி மனிதர்களால்தான் தூய்மையான அரசியல் மற்றும் சமூக தற்சார்பு சாத்தியம். அதன் மூலமே 'கிராம சுயராஜ்யம்' என்பதும் சாத்தியம்.
காந்தியின் தனிமனித அரசியல் என்பது, கிராம சுயராஜ்யத்தை நோக்கிய அரசியல்தான். அதுதான் இந்த தேசத்தை உயர்த்தும். ஏனெனில், காந்தியம் என்பது தனி மனிதனிலிருந்து தொடங்குகிறது. ”தன்னாட்சி என்பது அரசின் கட்டுதிட்டங்களிலிருந்து விடுவித்துக்கொள்ளும் தொடர்முயற்சியாகும். தன்னாட்சி பெற்றபின்னரும் மக்கள் அரசின் உதவியை எதிர்நோக்கியிருந்தால் அந்த தன்னாட்சி அர்த்தமற்றது” என்று காந்தி, யங் இந்தியாவில் எழுதியுள்ளார்.
காந்திய அரசியல் என்பது, தனி மனிதர்களின் நல்லியல்புகள் மீது நம்பிக்கை கொண்டது. நற்குணங்கள் கொண்ட தனி மனிதர்களால்தான் நல்ல அரசியலைத் தரமுடியும் என்பது காந்தியின் தளராத நம்பிக்கை.

