
கவனம்: தேசிய உணர்வு
தேசியம், தேசிய உணர்வு என்று பேசினாலே, இன்று கேலியாகப் பார்க்கப்படுகிறது. பிளவுகளும் பிரிவினை எண்ணங்களும் ஏராளமாகப் பேசப்படுகின்றன.
காந்தி, அனைத்து மக்களும் கொண்டதுதான் நமது தேசம் என்ற கருத்தை வலியுறுத்தினார். தென் ஆப்பிரிக்காவிலிருந்த போது, இந்தியர், கருப்பினத்தவர் இருவருக்குமிடையேயான வேறுபாடுகள் பற்றி காந்தி பேசியுள்ளார். அதற்கு காந்தி, ''மனித வர்க்கத்தில் ஒவ்வோர் இனமும் பல்வேறு கிளைகளைப் போன்றவர்கள்.
நாம் அனைவரும் பொதுவான ஒன்றிலிருந்து பிறந்திருக்கிறோம் என்பதை அறிந்து விட்டோமானால், மனித குடும்பத்திற்கிடையே உள்ள ஒற்றுமையை உணரலாம். பிறகு விரோதத்திற்கோ, போட்டிக்கோ இடமில்லை” என்று கூறியுள்ளார்.
இனவெறுப்பு ரீதியிலான வன்முறைக்கு எதிராக காந்தி செயற்பட்டார். பீகாரில் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது, “சில நூறு பேரை ஆயிரக்கணக்கோர் ஒன்று சேர்ந்து கொல்வது வீரமல்ல. கோழைத்தனத்திலும் கேவலமானது. நாட்டின் தேசியத்திற்கு கௌரவமானதன்று.
இப்பணியைச் செய்தவர்கள் இந்தியாவையும் கீழே இழுத்து அவமரியாதை செய்கிறார்கள்” என்று கூறியுள்ளார். வன்முறை என்பதை காந்தி எழுத்திலும் பேச்சிலும் வலிமையாக எதிர்த்தே வந்திருக்கிறார்.
''இந்தியா பிரிக்க முடியாத நிலப்பரப்பாக இருக்கிறது. எனவே, நம் பெரியவர்கள், தெற்கில் இராமேஸ்வரமும், கிழக்கில் ஜகந்நாதமும் (ஓடிசா), வடக்கில் ஹரித்துவார் ஆகிய இடங்களில் புனித ஷேத்திரங்களை அமைத்தனர். இதன்மூலம் ஒன்றுபட்ட தேசிய உணர்ச்சியை உருவாக்கினர்.” என்றார் காந்தி.
இந்தியாவை ஒருங்கிணைக்கக் கூடியது ஆன்மிகம். எந்த மாநிலத்தில் பிறந்தவராக இருந்தாலும், என்ன மொழி பேசுபவராக இருந்தாலும், அவர்களை இணைக்கும் கண்ணிகள், ஆன்மிகமும் பக்தியும்.
அந்தக் காலத்தில் பல சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றுக்கு இடையே இருந்த பூசல்களை ஊதிப் பெரிதாக்கியது பிரிட்டிஷார்.
சுதந்திர இந்தியாவிலும் இதே பிளவு எண்ணங்கள் தொடர்கின்றன. இதற்கு அருமருந்தாகத்தான், காந்தியடிகள் ஆன்மிகத்தையும் பக்தியையும் முன்வைக்கிறார்.

