PUBLISHED ON : ஏப் 11, 2016

இதோ இப்போது நீங்கள் கொண்டாடப்போவது தமிழ்ப்புத்தாண்டு. அதேபோல தீபாவளி, ரம்ஜான்,கிறிஸ்துமஸ் என எத்தனை எத்தனையோ விழாக்களில் மகிழ்ந்திருப்பீர்கள். விழாக்கள் என்றதும் வண்ணமயமான காட்சியை மனம் ஓவியமாய் வரைகிறது. ஆடிப்பாடி, தின்பண்டங்களைச் சுவைத்து பண்டிகைகளை இனிமையாகக் கழிக்கிறோம்.
அந்தக் காலத்திலும் நம் முன்னோர்கள் விழா கொண்டாடியிருப்பார்கள் அல்லவா? அப்போது புகழ் பெற்ற விழாவாக இருந்து, இப்போது இல்லாமல் போன ஒரு விழாதான் இந்திர விழா!
இந்த விழா பற்றி சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளும் மணிமேகலைக் காப்பியத்தில் சீத்தலைச் சாத்தானாரும் பாடி இருக்கிறார்கள். புகார், பூம்புகார் என அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்தில் இது சிறப்புற நடந்ததாகப் பாடல்கள் மூலம் தெரிகிறது. மக்கள் பசி, பிணி, பகை ஆகியவற்றால் துன்பம் அடையாதிருக்கும் பொருட்டு தெய்வத்தைப் பிரார்த்திக்கும் விழாவே இது. 'தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்' - என சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்.
விழா முடியும் வரை 28 நாட்களும் தேவர்களும் இந்திரரும் வந்து புகார் நகரில் தங்குவார்கள் என்னும் நம்பிக்கை மக்களிடம் இருந்தது. 'இந்த நாட்களில் புகார் நகரம் மேலும் அழகுபெற்று, தேவலோக நகரமான அமராவதியே பொலிவு குன்றிப் போகும்' என்கின்றன இலக்கியக் குறிப்புகள்.
இந்திரவிழா இப்போது நடக்காமல் போனாலும் அந்த நாட்களின் தொடர்ச்சியாக ஒன்றே ஒன்று மட்டும் இன்றும் தொடர்கிறது. அதுதான் பட்டிமன்றம். சிலப்பதிகாரத்தில் 'பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்' என்னும் வரியிலிருந்து நமக்கு இது தெரியவருகிறது.
