PUBLISHED ON : ஜூன் 12, 2017

சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில், தமிழக வீராங்கனை ஜென்னிதா ஆண்டோ தங்கம் வென்றுள்ளார்.
திருச்சி, பொன்மலைப் பட்டியைச் சேர்ந்த இவர், போலியோவால் பாதிக்கப்பட்டவர். இதனால் இரண்டு கால்களும், ஒரு கையும் செயலிழந்து போனது. ஆனாலும், சிறுவயதிலிருந்தே செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். இவரை ஊக்கப்படுத்தி, மாவட்ட, மாநிலப் போட்டிகளில் பங்கேற்கச் செய்தவர், இவரது தந்தை காணிக்கை இருதயராஜ்.
அதனைத்தொடர்ந்து, தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை வாங்கி உள்ளார். ஏற்கெனவே, ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
சமீபத்தில் செக் குடியரசில் நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச 39வது செஸ் போட்டியில் கலந்துகொண்டு, உலக சாம்பியன் பட்டத்தையும், நேஷனல் மாஸ்டர் பட்டத்தையும் வென்று திரும்பி இருக்கிறார்.

