PUBLISHED ON : ஜூன் 12, 2017

பிளாஸ்டிக் மக்கவே மக்காது என்று தெரிந்ததும், பலரும் அதன் பயன்பாட்டைக் குறைத்து வருகிறோம். அதேசமயம், நமது கவனத்தையும் மீறி, பிளாஸ்டிக் குப்பைகளை உருவாக்குகிறோம். அதில் பால் பாயின்ட் பேனாவும் உண்டு.
பள்ளிப் பருவம் தொடங்கி, நாம் உபயோகிக்கும் பேனாக்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது, சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் மாசு அளவில் பெரியது. இதனை உணர்ந்த ஒரு பள்ளி மாணவி, தனது பேனாக்களை வீசாமல் சேகரித்து வருகிறார்.
கேரள மாநிலம், காஞ்சிரப்பள்ளி தாலுகாவில் உள்ள, பொடிமட்டோம் (Podimattom) என்ற ஊரில், எட்டாம் வகுப்பு படிக்கும் ஐரின் ரோஸ்தான் அவர். இதுவரை, தான் மற்றும் தன் நண்பர்கள் உபயோகித்த 5,000 பால் பாயின்ட் பேனாக்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் தபால் தலைகள், நாணயங்கள் போன்றவற்றைச் சேகரித்து வந்த ஐரின், இப்போது பேனாக்கள் சேகரிப்பிலேயே மும்முரமாக இருக்கிறார். இதற்கு மாற்று யாராவது கண்டுபிடிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
ஐரின் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது, அவரது அறிவியல் ஆசிரியை, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் பாதிப்புகளைப் பற்றி விளக்கியதில் இருந்து ஆரம்பித்தது அவரது பேனா சேகரிப்பு. பிளாஸ்டிக் பேனாக்களைக் கொண்டு, ஓர் அலங்காரப் பொருளை வடிவமைத்து, அதை கண்காட்சியாக வைப்பதன் மூலம், சுற்றுப்புறச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஐரினின் இப்போதைய திட்டம்.
பிளாஸ்டிக் பேனாக்கள் பயன்பாட்டைக் குறைப்பதற்கு ஐரினிடம் ஒரு நல்ல திட்டமும் இருக்கிறது. காகிதத்தில் பேனாக்கள் செய்யப்பட்டால், அவை சுற்றுச்சூழலைப் பாதிக்காது. அத்தோடு, அந்த காகிதங்களை மறுசுழற்சியும் செய்ய முடியும் என்கிறார் ஐரின்.
இயற்கை வேளாண்மையிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஐரின். அவர் வீட்டின் பின்புறம் சிறிய அளவிலான தோட்டத்தையும் அவர் பராமரித்து வருகிறார். ஐரினின் பெற்றோரும், சகோதரியும் அவருக்கு இவ்விஷயங்கலில் உறுதுணையாக உள்ளனர்.

