PUBLISHED ON : அக் 30, 2017

கணக்கு என்றாலே பயப்படும் மாணவர்கள் பலர் உண்டு. எல்லா பாடங்களையும் போல கணிதமும் முக்கியமான பாடம்தான். கணிதப் பாடம் ஏன் கசக்கிறது? மாணவர்களின் ஆர்வமின்மையா, கற்றல் குறைபாடா அல்லது ஆசிரியர்கள் நடத்துவது புரியவில்லையா? திருவள்ளூர், பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டோம்:
ர.சதீஷ், 10ம் வகுப்பு
கணிதம் பற்றிய புரிதல் இல்லாதவங்கதான் கணிதம் கசக்குதுன்னு சொல்வாங்க. சூத்திரங்களை மனப்பாடம் பண்றது, அதை யூஸ் பண்றது இதையெல்லாம் கஷ்டம்னு நினைக்கறாங்க. கணிதம் நமக்குள்ள கிரியேடிவா யோசிக்கிற திறனைத் தருது. அன்றாட வாழ்க்கையில எண்களோ, கணிதமோ பயன்படுத்தாம இருக்க முடியாது. இதைப் புரிஞ்சுகிட்டா கணிதம் கசக்காது, கற்கண்டா இனிக்கும்.
அ.கணேசன், 10ம் வகுப்பு
நான் எல்லா பாடத்திலேயும் நல்ல மார்க் எடுப்பேன். கணக்குப் பாடம் மட்டும்தான் புரியவே மாட்டேங்குது. அதுக்கு நிறைய ஞாபகம் வெச்சுக்க வேண்டியிருக்கு. ஃபார்முலா படிக்கறதும் நினைவுல வெச்சிக்கறதும் ரொம்ப கஷ்டம். அல்ஜீப்ரா, இரட்டை ஃபார்முலா இதையெல்லாம் ஏன் படிக்கறோம்னு தெரியல. அடுத்தடுத்த வகுப்புக்குப் போகும்போது, கணிதம் தேவையில்லாம இருக்கு. கல்லூரியில அறிவியலை முக்கிய பாடமா எடுத்தா, அங்கே கணிதம் வர்றதில்லை. அப்போ கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணி கணக்குப் பாடத்தைப் படிக்கறது கசப்பாதான் இருக்கு.
செ.பிரவீன்குமார், 12ம் வகுப்பு
கணிதத்துக்கு அடிப்படை தர்க்கம், லாஜிக். ஏன் ஒரு சூத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது? எப்படி அதைப் பயன்படுத்தணும்னு தெளிவா புரிஞ்சுக்கணும். ஒவ்வொரு ஸ்டெப்பா போகும்போது, முன்னால இருக்கற ஸ்டெப் தான், அடுத்த ஸ்டெப்புக்கு வழிகாண்பிக்கும். இந்த வரிசைமுறைக்குத்தான் தர்க்கம் அவசியம். மற்ற பாடங்கள்ல இதுமாதிரியான காரண, காரியங்களுக்கான தர்க்கம் அதிகம் இருக்காது. தகவலாத்தான் பாடங்கள் இருக்கும். அதை மட்டுமே படிச்சவங்களுக்கு, கணிதம் கஷ்டமா இருக்கும். ஆனால், தர்க்க அறிவை வளர்த்துக்கிட்டா கணிதம் சுலபமாயிடும்.
தி.ஹரிபிரியா, 12ம் வகுப்பு
மேத்ஸ் ரொம்ப கஷ்டமான சப்ஜெக்ட் இல்ல. சொல்லப்போனா நூத்துக்கு நூறு மார்க்கை கணிதத்திலதான் வாங்க முடியும். கணிதத்தோட அடிப்படையே அதனோட அழகுதான். கால்குலஸ், டிஃபரென்ஷியல் ஈக்குவேஷன், மென்சுரேஷன்... எல்லாமே இந்த உலகத்தோட தேவைகளுக்காக உருவான புதிய கணித துறைகள். இவையெல்லாம் ஏன் உருவாச்சுங்கற சரித்திரமும், அதில இருக்கிற பல்வேறு கணித அறிஞர்களோட கண்டுபிடிப்புகளையும் தெரிஞ்சுக்கிட்டா, மேக்ஸ் படிக்கறது பயங்கர சுவாரசியமாயிடும். மேத்ஸும் ஒரு கதை மாதிரி தான் இருக்கும்.
சி.சு.கீதப்பிரியா, 12ம் வகுப்பு
சில மாணவர்கள் தான் கணிதம் கசக்குதுன்னு சொல்வாங்க. அதுக்கு அவங்களோட ஆர்வமின்மைதான் காரணம். அடிஷன், சப்ஸ்டிராக்ஷன் தெரியாத மாணவர்கள்கூட இருக்காங்க. கணிதப் பாடம் நமக்கு நிறைய செல்ஃப் கான்பிடன்ஸ் தருது. அடிப்படைகளை தெளிவா புரிஞ்சுகிட்டு படிச்சா கணக்கு ஈசியா இருக்கும். அக்கறையில்லாம, வெறுப்பா படிச்சா கணிதம் கசக்கத்தான் செய்யும். இடமதிப்பு, இலக்கங்கள், எண்களின் வளர்ச்சி, பயன்பாடு, அளவுகள், வடிவங்கள், பண்புகள், இவற்றின் தொடர் பயன்பாடு, சூத்திரங்கள், வரையறைகளை சரியா புரிஞ்சுக்கணும். புரிதல் இல்லாததால்தான், கணிதத்தை படிக்கறதிலயும், திறமையாக கையாள்வதிலும் சிரமங்கள் வருது.
பா.சக்திபிரியா, 12ம் வகுப்பு
மேத்ஸ் எனக்கு வராதுன்னு நினைச்சா வராதுதான். எல்லா பாடங்களையும் போலத்தான் கணிதமும். அதை மனப்பாடம் மட்டும் பண்ணா போதாது. புரிஞ்சுகிட்டு படிக்கணும். திரும்பத் திரும்ப கணக்குகளைப் போட்டுப் பார்க்கணும். கான்செப்ட் புரியாமலே மேத்ஸை படிச்சுட்டு எழுதிட முடியாது. ஃபார்முலாக்களை வெறுமனே மனப்பாடம் பண்ணா மட்டும் புரிஞ்சுக்க முடியாது. அதை கணக்குகளில் அப்ளை பண்ணி பார்க்கும்போதுதான், அது புரியும். கணிதப் பாடத்தைப் பொறுத்தவரை, தொடர்ச்சியான பயிற்சி அவசியம். அதைச் செஞ்சோம்னா கணக்கு கசக்குதுன்னு யாரும் சொல்ல மாட்டாங்க.
