PUBLISHED ON : செப் 02, 2019
அமேசான் தீயால் ஏற்படும் பாதிப்பைப்பற்றிச் சொல்லும்போது, “நம் பூமியில் 20% ஆக்சிஜனை வெளியிடுவது அமேசான்தான்” என்ற செய்தியே எல்லோராலும் பேசப்படுகிறது. ஆனால், இது அறிவியல்பூர்வமாக முற்றிலும் தவறான தகவலாகும்.
நம் பூமியில் வெப்பமண்டலக் காடுகள் (tropical forest), வெப்பமண்டல மழைக்காடுகள் (tropical rainforests), பாலைவனம், புல்வெளிகள் போன்ற பல வகையான நிலப்பரப்புகள் உள்ளன.
இப்பரப்புகளிலிருந்து நமக்குத் தேவையான ஆக்சிஜன் ஒளிச்சேர்க்கை மூலம் உருவாகிறது. இதுதவிர, கடலில் இருக்கக்கூடிய ஃபைட்டோபிளங்டன் ஒளிச்சேர்க்கை மூலமும் ஆக்சிஜன் கிடைக்கிறது.
பூமியின் மொத்த நிலப்பரப்பில் வெளியாகும் ஆக்சிஜனில், 34% ஆக்சிஜன், வெப்பமண்டலக் காடுகளில் இருந்து வெளியாகிறது. இதில் வெப்பமண்டல மழைக்காடுகளின் பங்கும் உண்டு. இப்படி வெளியாகும் ஆக்சிஜனை பீட்டாகிராம் (Petagram- - Pg) எனும் அளவுகோலைப் பயன்படுத்தி அளக்கிறோம்.
ஒரு பீட்டாகிராம் என்பது 1015 கிராம். எவ்வளவு கரியமில வாயுவை வைத்து ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறதோ, அதன் அடிப்படையில் எவ்வளவு ஆக்சிஜன் வெளியாகிறது என்பது கணக்கிடப்படுகிறது.
இந்தக் கணக்கின்படி, ஆண்டொன்றுக்கு நிலத்தில் மொத்தமாகத் தயாரிக்கப்படும் ஆக்சிஜனின் அளவு ஏறத்தாழ 330 Pg. இதில் ஏறத்தாழ 16% ஆக்சிஜனை, அமேசான் காடுகள் வெளியிடுகின்றன. அதாவது, ஓராண்டுக்கு 54 Pg ஆக்சிஜன். இந்த 16% என்பதுதான் ஏறத்தாழ 20% ஆக சொல்லப்படுகிறது.
கடல்வாழ் ஃபைட்டோபிளாங்டன் வெளியிடும் ஆக்சிஜனின் அளவு, ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 240 Pg. மொத்தமாக ஓராண்டுக்கு 570 Pg ஆக்சிஜன் பூமியில் வெளியாகிறது. அப்படிப் பார்த்தால், அமேசான் காடுகள் வெளியிடும் ஆக்சிஜனின் அளவு 9% தான்.
இந்த ஆக்சிஜனும் முழுவதுமாக வெளியேறுவதில்லை. அங்குள்ள உயிரிகள், தாவரங்கள், மற்றும் பிற செயற்பாடுகளுக்கு என்று பெருவாரியான ஆக்சிஜன் அமேசான் காடுகளுக்குள்ளேயே மீண்டும் இழுத்துக் கொள்ளப்படுகிறது.
- ஆசிஃபா
