PUBLISHED ON : அக் 20, 2016

குழு என்பது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களைக் குறிக்கும். குறி என்பது குறிப்பிடு என்ற பொருளைத் தரும். குழுவும் குறியும் சேர்ந்ததுதான் குழூஉக்குறி.
குழுவாக உள்ளவர்கள், தமக்கு மட்டும் பொருள் விளங்குமாறு, குறிப்பான சொற்களைக் கொண்டு பேசிக்கொள்வது குழூஉக்குறி.
அந்த வகை சொற்கள், பொது வழக்கில் உள்ளவையாக இருக்கலாம். அல்லது உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் அவற்றின் பொருள் அந்தக் குழுவினரால் நிர்ணயிக்கப்பட்டு, அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
வணிகர் வீதியில் சென்று பாருங்கள் 'சரக்கு வந்துடுச்சு.” என்பார்கள். சரக்கு என்னும் சொல் எதைக் குறிக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஏதோ ஒரு பண்டம். அவர்களுக்குத்தான் அது அரிசியா, பருப்பா ,உளுந்தா என்பது தெரியும். தமக்குள்ளாக ஒரு பொருளைச் சரக்கு என்று கூறிக்கொள்கிறார்கள். அவர்களிடம் 'சரக்கு ஒரு கிலோ கொடுங்க,' என்று கேட்டு வாங்க முடியாது.
நண்பர்களுக்கிடையில் 'வைட்டமின் 'ப' இருக்கா?' என்று கேட்பார்கள். அதென்ன? அப்படியொரு ஊட்டச்சத்து இருக்கிறதா என்ன? இல்லை. பணம் என்பதைத்தான் அவ்வாறு கூறிக்கொள்கிறார்கள். வைட்டமின் 'ப' என்பதைப் பணத்துக்கு மாற்றான சொல்லாக வேறிடத்தில் பயன்படுத்த முடியாது.
- மகுடேசுவரன்

