PUBLISHED ON : நவ 28, 2016
விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக் கோள்களின் ஆயுட்காலத்தை குறைக்க, திட்டமிட்டுள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான 'இஸ்ரோ'வின், மகேந்திரகிரி பிரிவின் துணை இயக்குனர், ஆசீர் பாக்கியராஜ் கூறியதாவது:
இன்றைய அறிவியல் தொழில்நுட்பம், வியத்தகு வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள், சில ஆண்டுகளிலேயே பழைய தொழில்நுட்பமாக மாறிவிடும். அவை, பயன்படாத நிலை ஏற்படும். இதனால், செயற்கைக்கோள்களின் ஆயுட்காலத்தை, 10 ஆண்டுகளில் இருந்து, ஐந்து ஆண்டுகளாக குறைக்க திட்டமிடப்படுகிறது. வருங்கால அறிவியல் வல்லுனர்களின் திறமைகளை பயன்படுத்த, இந்த முடிவு உதவும். ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 செயற்கைக்கோளுக்கான, இயந்திரம் தயாரிக்கும் பணி, அடுத்த ஆண்டு நிறைவு பெறும். இவ்வாறு, அவர் கூறினார்.

