PUBLISHED ON : அக் 20, 2016

வாரன் ஹேஸ்டிங்ஸ் (warren hastings), கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின்போது, 1772ல் வங்காளத்தின் ஆளுனராகப் பதவியேற்றார். அச்சமயத்தில் வரியை கம்பெனி வசூலித்துக்கொண்டு, ஆட்சியை நவாப் வசம் கொடுத்திருந்தது. ராபர்ட் கிளைவ் கொண்டுவந்த, இந்த இரட்டை ஆட்சி முறையினாலும், பஞ்சத்தினாலும், வங்கத்தின் பொருளாதார நிலை மிகவும் சீர்கெட்டிருந்தது.
எனவே அரசியலமைப்பையும், ஆட்சித் துறையையும் சீரமைக்கும் விதமாகப் பிரிட்டன் அரசு, இரண்டு சட்டங்களை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தது. ஒழுங்குமுறை சட்டம் (Regulating Act of 1773) & பிட் இந்திய சட்டம் (Pitt's India Act) என்ற அந்தச் சட்டத் திருத்தங்களின் விளைவாக, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக உயர்த்தப்பட்ட வாரன், தனது பதவிக் காலத்தில் பல்வேறு சீர்திருத் தங்களுக்கு வித்திட்டார்.
வாரன் சீர்திருத்தங்கள்
வருவாய்
* வருவாய்த்துறைக் கழகம் நிறுவப்பட்டது.
* மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, ஆங்கிலேய கலெக்டர்கள் வரிவசூல் பொறுப்பை ஏற்றனர்.
* நிலத்தை குத்தகைக்கு எடுப்பவர், ஐந்தாண்டுகளுக்கு வரிவசூல் செய்து அரசுக்குச் செலுத்த வேண்டும்.
நிர்வாகம்
* இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, நேரடியாக ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியே ஆட்சிப் பொறுப்பை முழுமையாக ஏற்றது.
*கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார்.
நீதித்துறை
* ஜமீன்தார்களின் நீதித்துறை அதிகாரம் பறிக்கப்பட்டது.
* ஒவ்வொரு மாவட்டத்திலும், சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. கிரிமினல் நீதிமன்றங்களில் இந்திய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
* முஸ்லிம்களுக்குக் குரானை அடிப்படையாகக் கொண்டும், இந்துக்களுக்கு சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டும் சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.
* முதல்முறையாக நீதிமன்றத் தீர்ப்புகள் ஆவணப்படுத்தப்பட்டன.
வணிகம்
* கம்பெனிக்கென, தரக்கட்டுப்பாட்டுக் குழு நிறுவப்பட்டது.
* கம்பெனி ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டது.
* சுங்கவரியில் 2.5% தள்ளுபடி வழங்கப்பட்டது.
கல்வி
* மதரஸா கல்வி நிறுவனத்தை, 1781ல் கொல்கத்தாவில் துவக்கினார்.
இவர் 1773--1785 வரை, இந்தியாவில் கம்பெனி ஆட்சியில் இருந்த பகுதிகளுக்கு ஆளுனராக இருந்தார். அப்போது கம்பெனி ஆட்சியில் மெட்ராஸ், பாம்பே/பம்பாய், கொல்கத்தா மாகாணங்கள் இருந்தன. இவர் பதவிக்கு வருவதற்கு முன், 1764ல், மொகலாய அரசர், அவத் அரசர் மற்றும் வங்காளத்தின் நவாபை, கிழக்கிந்திய கம்பெனி 'பக்ஸர் போர்'ல் வீழ்த்தியது. இதன் மூலம், இன்றைய மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், உத்திர பிரதேசம் மாநிலங்களில் உள்ள பெரும்பகுதிகள், கம்பெனி ஆட்சிக்கு வந்தன். இது, இந்தியாவின் பெரும்பகுதி என்பதால், வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்தியாவின் முதல் ஆளுனராகக் கருதப்படுகிறார். அப்போது கொல்கத்தா இந்தியாவின் தலைநகராக செயல்பட்டது.

