PUBLISHED ON : ஜூன் 06, 2016

மஞ்சு: அங்க என்ன தெரியுது சாந்தி? வானத்தையே உத்துப் பாத்துகிட்டு இருக்கே?
சாந்தி: அதை விடு. உனக்கு பி.எஸ்.எல்.வி. தெரியுமா?
ம: எனக்கு 'எய்த் பி' செல்விதான் தெரியும். உயரமா இருப்பாளே...
சா: உன்கிட்ட சொல்ல வந்தேன் பாரு... இந்த வானம் எவ்வளவு பெரிசு! நிலா, நட்சத்திரங்கள், சூரியன், அண்டவெளி...
ம: ஏய்... இன்னிக்கு என்ன அமாவாசையா, பௌர்ணமியா? ஒரு மாதிரி பேசுற?
சா: அடி வாங்கப் போற. நான் பிரமிச்சுப் பேசிட்டு இருக்கேன். நீ கிண்டல் பண்ற.
ம: ஆமா! உலகத்துலயே நீ மட்டும்தான் வானத்தப் பாக்குற... ஹாலிவுட் படங்கள்ல வானத்தையும் தாண்டி வேற உலகத்துக்கே பிக்னிக் போக ஆரம்பிச்சுட்டாங்க....
சா: ஹாலிவுட் படம் இருக்கட்டும். நம்ம இஸ்ரோ அனுப்புன ஆர்.எல்.வி. பத்தித் தெரியுமா?
ம: இவரு யாரு? விண்வெளி வீரரா? பேரு புதுசா இருக்கு?
சா: ஆர்.எல்.வி. (Reusable Launch Vehicle)னா மறு பயன்பாட்டு விண்கல வாகனம். செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திட்டுத் திரும்பி வந்துரும்.
ம: நீ முதல்ல கேட்டியே பி.எஸ்.எல்.வி. தெரியுமான்னு. அந்த ரக விண்கல வாகனங்கள் திரும்பி வராது, அப்படிதானே?
சா: கரெக்ட் மஞ்சு. இந்தியாவோட பெரிய சாதனை இது! அமெரிக்காவுக்கு அப்புறமா நாமதான் ஆ.எல்.வி-யைப் பயன்படுத்தி இருக்கோம்.
ம: இந்தியான்னா சும்மா இல்லன்னு நிருபிச்சுட்டாங்க!
சா: அது மட்டுமில்லை! இந்த மாசக் கடைசில, பி.எஸ்.எல்.வி. மூலமா ஒரே முறையில் 22 செயற்கைக் கோள்களை ஸ்பேஸுக்கு அனுப்பப் போறதா இஸ்ரோ தலைவர் கிரண் குமார் சொல்லிருக்காரு!
ம: ஹ்ம்ம்ம்... எவ்வளவு அழகா இருக்கு இது! என் கண்ணை என்னாலயே நம்ப முடியலை...
சா: என்னடி, நான் உன்கூட பேசிக்கிட்டு இருக்கேன். நீ ஏதோ கண்ணாடிய வச்சு விளையாடிட்டு இருக்க.
ம: உனக்கு மட்டும்தான் எல்லா விஷயங்களும் தெரியுமா? இப்போ நான் ஒண்ணு காட்டுறேன். நீ பிரமிச்சுப் பார்த்த வானம் இந்தக் கண்ணாடில எப்படித் தெரியுது பாரு!
சா: ஆமா! இவ்வளவு அழகா, அதுவும் நேர்ல பாக்குற மாதிரி... அது என்ன வார்த்தை... ஆங்... தத்ரூபம்... தத்ரூபமா இருக்கே! என்னடி மஞ்சு இது?
ம: ஹ... ஹா... அப்படிக் கேளு! இது மெய்நிகர் கண்ணாடி (Virtual Reality Glass) சாதாரணமாப் பதிவு செய்யப்பட்ட கற்பனைக் காட்சிகளை நிஜமாப் பார்க்குறது மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கும்!
சா: ஆமா... இந்த வானம்தான் எவ்வளவு பெரிசு! நிலா, நட்சத்திரங்கள், சூரியன்னு எல்லாமே தொடுற தூரத்தில் தெரியுது...
ம: சூரியனைத் தொட்டுடாதே... சுட்டுடும்.

