PUBLISHED ON : மார் 18, 2019

இந்தியாவில் கண்டறியப்படும் புற்றுநோய் வகைகளிலேயே அதிக எண்ணிக்கையில் காணப்படுவது மார்பகப் புற்றுநோய் என, ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இங்கு மார்பகப் புற்றுக்கு ஆளாகும் பெண்களில் இருவரில் ஒருவர் மரணத்தைச் சந்திக்கின்றனர்.
புற்றுநோயை விரைவாகக் கண்டுபிடித்தால், அதைக் குணப்படுத்தும் வாய்ப்பு அதிகம். கேரள மாநில விஞ்ஞானியான முனைவர் சீமா, மார்பகப் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புதிய உள்ளாடையை வடிவமைத்துள்ளார். இப்போது மம்மோகிராம் சோதனையே இதனைக் கண்டறிய உதவுகிறது. இதற்கான செலவு ரூபாய் 1,500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. நாடெங்கும் மம்மோகிராம் கருவியும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இந்நிலையில், சீமாவின் புதுக் கண்டுபிடிப்பு, இந்த இரண்டு சிக்கல்களையும் தீர்க்கிறது.
புற்றுநோய் செல்கள் ஒன்றிலிருந்து பலவாகப் பிரியும் தன்மை கொண்டவை. அப்படிப் பிரியும்போது வெளியாகும் வெப்பநிலையைக் கொண்டு இந்த உள்ளாடை, புற்றுநோயின் இருப்பைக் கண்டுபிடித்துவிடும். இதற்கென பிரத்யேகமான உணர்வுக் கருவி (sensor) இந்த உள்ளாடையில் இருபுறமும் பொருத்தப்பட்டுள்ளன. 1 மி.மீ. நீள, அகலமே உள்ள இந்த சிறு உணர்வுக் கருவியில் பதிவாகும் தகவல்களைக் கணினிக்கும் மாற்றிக் கொள்ளலாம்; ப்ளூடூத் மூலம் கைபேசியிலும் தகவல்களைப் பதிவு செய்துகொள்ள முடியும்.
மொத்தப் பரிசோதனையும் 15 லிருந்து 30 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும். இப்போது இத்தகைய உள்ளாடை ஒன்றைத் தயாரிக்க 500 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், வர்த்தக ரீதியாகத் தயாரிக்கும்போது 200 ரூபாயாக இச்செலவு குறையக்கூடும்.
மலபார் புற்றுநோய் மையத்தில் (Malabar Cancer Centre) 117 நோயாளிகளிடம் இந்த உள்ளாடை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது. கதிரியக்கம் பற்றிய பயம், வலி போன்ற எதுவும் இல்லாத இந்த எளிய பரிசோதனை, பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்காக முனைவர் சீமாவுக்கு, இந்த ஆண்டுக்கான 'நாரி சக்தி புரஸ்கார்' (-Nari-shakti- puraskar) விருது வழங்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் விருதாகும்.
