PUBLISHED ON : மார் 17, 2025
பழங்காலத்தில் இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது இந்தப் பல்கலைக்கழகம். உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து, இங்கே தங்கிப் படித்தனர். மிகச்சிறந்த ஆசிரியர்கள் இங்கே பணியாற்றினர். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், கல்வியாளர்கள் தங்குவதற்கான விடுதி வசதிகளையும் கொண்டிருந்தது இந்தப் பல்கலைக்கழகம்.
பொ.யு. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கி, பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து இயங்கியது இந்தக் கல்வி நிலையம். அதன்பிறகு, பக்தியார் கில்ஜி (Bakhtiyar Khilji) என்ற படையெடுப்பாளரால் 1193ல் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. தர்மபாலர், ஷிலபத்ரா போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் கீழ், நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இருந்தனர்.
நூலகத்தில் உள்ள பனை ஓலைகளில், கையால் எழுதப்பட்ட 90 லட்சம் கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. இயற்கை சிகிச்சை முறைகளை அடிப்படையாகக் கொண்ட, ஆயுர்வேத மருத்துவம் சொல்லித் தரப்பட்டது. கணிதம், வானியல் கற்பிக்கப்பட்டன. சரித்திரத்தில் மறைந்துபோன இந்தப் பல்கலைக்கழகம், அகழ்வாராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டது.
இந்தியாவின் கௌரவத்தின் அடையாளமாகத் திகழும் இந்தப் பல்கலைக்கழகத்தை, மீண்டும் அதே பெயரில் கொண்டு வர வேண்டும் என்று இந்திய அரசு விரும்பியது.
பீகாரில் ராஜ்கிர் (Rajgir) என்னும் இடத்தில் இயங்கி வரும், அந்தப் பல்கலைக்கழகம் எது?
விடை: நாளந்தா பல்கலைக்கழகம்