PUBLISHED ON : ஏப் 07, 2025

தமிழ் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் கொற்றவை தெய்வம் பற்றிச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. போர், வெற்றியின் தெய்வமாகக் கொற்றவை போற்றப்படுகிறார். துர்கை, மகிஷாசூரமர்த்தினி என்றும் இவர் அழைக்கப்படுகிறார். படத்தில் இருக்கும் இந்தக் கொற்றவைச் சிற்பம், சிதம்பரம் நடராசர் கோயில், மேற்கு வாயில் கோபுரத்தின் அடியில் செதுக்கப்பட்டுள்ளது. பதினெட்டுக் கரங்களுடன் கூடிய இந்தச் சிற்பம், சோழர் காலத்தைச் சேர்ந்தது. எருமைத் தலையும் மனித உடலும் கொண்ட மகிஷாசூரனை வதம் செய்யும் காட்சி, சித்திரிக்கப்பட்டுள்ளது.
அன்னிய படையெடுப்பாளர்களால் சிற்பம் சிதைக்கப்பட்டிருக்கிறது. அநபாயன் என்ற பெயருடைய சோழ மன்னர் காலத்தில்தான், சிற்பம் அழகிய கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்த மன்னர் பொ.யு. 1133 முதல் 1150 வரை, சோழ நாட்டை ஆட்சி செய்தவர். பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் இவரின் அமைச்சரவையில் இருந்தார். கல்வியிலும் கலையிலும் சிறந்து விளங்கிய இந்த மன்னரின் இன்னொரு புகழ்பெற்ற பெயர் என்ன?
விடை: இரண்டாம் குலோத்துங்கன்.