PUBLISHED ON : செப் 30, 2019
கவனம்: நுகர்வோர் சுரண்டப்படுதல்
இன்று நாம் காணும் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று, நுகர்வோர் சுரண்டல். அதாவது, ஒவ்வொரு பொருளையும் நாம் நம்பிக்கையோடு வாங்குகிறோம். ஆனால், அதில் கலப்படம் உண்டு. போலி உண்டு. விலையில் ஏமாற்றல் உண்டு. நுகர்வோர் நீதிமன்றங்களில் இத்தகைய முறையற்ற, நியாயமற்ற வர்த்தகம் தொடர்பான வழக்குகள் ஏராளம் வருகின்றன.
நாணயமாக நடந்துகொள்ள முடியாதா?
''நாணயத்திற்கு (பணம்) மட்டுமே மதிப்பளித்து நாணயத்தை (உண்மை) புதைத்து நடைபெறும் ஒவ்வொரு வணிகமும் அறமற்ற வணிகமே. அவர் அறமற்ற வணிகரே” என்பது காந்தியின் கருத்து.
ஒரு பொருளை உற்பத்தி செய்துவிட்டு, அதற்கு மக்களை அடிமைப்படுத்த வேண்டும் என்பது நிறுவனங்களின் எதிர்பார்ப்பு. இதை காந்தி அன்றே வெறுத்தார். ''ஒரு நாட்டிலுள்ள நுகர்வோரின் தேவை அடிப்படையில்தான் உற்பத்தி இருக்க வேண்டும்” என்றார்.
அப்பொழுது தான் ஆற்றலை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியும். இயற்கை வளங்களை முறையாகப் பேண முடியும் என்று நம்பினார்.
இதற்கு மாற்றாக காந்தியடிகள் முன்வைத்த சிந்தனைதான் 'சர்வோதயம்' என்பது.
'சர்வோதயம்' என்னும் சொல் 'எல்லோருடைய நலம்' என்று நேரடிப் பொருள் தரும். சர்வோதயம் என்பதை ஒரு பொருளாதாரத் தத்துவமாகக் கொள்ளலாம்.
பொதுவுடைமைக் கொள்கையைத் தாண்டி, தனிமனித உழைப்பு மற்றும் முன்னேற்றத்தில் இருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைய வேண்டும் என்பதே இதன் தத்துவம்.
நம் நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி நம் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை தாமே உற்பத்தி செய்துகொண்டு அமைதியாக வாழ்வதே இதன் சாராம்சம்.
- சி. செல்லப்பாண்டியன்

